கீழக்கரை: ராமநாதபுரம் மாவட்டம், ஏர்வாடியில் அமைந்துள்ள அல் குத்புல் சுல்தான் செய்யது இப்ராஹிம் பாதுஷா நாயகம் ஒலியுல்லாஹ் தர்காவில் 851வது ஆண்டு உரூஸ் எனப்படும் மத நல்லிணக்க சந்தனக்கூடு விழா கோலாகலமாக நடைபெற்றது.
கடந்த ஏப்ரல் 29 அன்று துவங்கிய இந்த விழா, மவுலீது ஓதுதலுடன் (புகழ் மாலை) ஆரம்பமானது. 23 நாட்களுக்கு மாலை 6:30 மணி முதல் இரவு 10:30 மணி வரை தொடர்ந்து மவுலீது ஓதப்பட்டது. மே 9 அன்று, 80 அடி உயர கம்பத்தில் பச்சை வண்ண பிறை கொடி ஏற்றப்பட்டது.
இந்த விழாவிற்காக, முதல் தர சந்தனக் கட்டைகள் பன்னீரில் ஊறவைக்கப்பட்டு, 21 நாட்கள் கற்களில் தேய்த்து எடுக்கப்பட்டு, வெள்ளிக் குடங்களில் சேகரிக்கப்பட்டன. சந்தனக்கூடு விழா இரவு முழுவதும் வெகு சிறப்பாக நடைபெற்றது. இஸ்லாமிய மார்க்க அறிஞர்களால் மவுலீது ஓதப்பட்டது.
மே 22 அன்று, 2 கி.மீ. தொலைவில் உள்ள ஏர்வாடி முஜாகீர் நல்ல இப்ராகிம் தைக்காவிலிருந்து 11 நாட்டியக் குதிரைகள் முன்னால் செல்ல, மேள தாளங்கள் முழங்க, யானையின் மீது வண்ணப் போர்வைகள் கொண்டு வரப்பட்டன. 40 அடி உயரம் கொண்ட மின்னொளியால் அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூடு ரதம் ஏராளமான யாத்திரீகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் ஊர்வலமாக வந்தது.
ஏர்வாடி தர்காவின் நுழைவாயிலில், மூன்று வெள்ளிக் குடங்களில் நிரப்பப்பட்ட சந்தனங்கள் மூன்று முறை வலம் வந்து, புனித மக்பராவின் மீது பூசப்பட்டன. பின்னர், வண்ணப் போர்வைகள் போர்த்தப்பட்டு, மளிகைச் சரங்களால் அலங்கரிக்கப்பட்டு, வாசனை திரவியங்கள் தெளிக்கப்பட்டன.
இந்த மத நல்லிணக்க விழாவைக் காண நாட்டின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கானோர் திரண்டிருந்தனர். கூட்டத்தைக் கட்டுப்படுத்தவும், பாதுகாப்பை உறுதி செய்யவும் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டதுடன், பல்வேறு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஏர்வாடி தர்கா ஹக்தார் நிர்வாக சபையினர் செய்திருந்தனர். வரும் மே 28 அன்று கொடி இறக்கப்பட்டு, நெய்ச்சோறு வழங்கி விழா நிறைவடையும்.