கொளுத்தும் கோடை வெப்பம் ஒருவரை சோம்பலாக உணர வைக்கும், இதனால் ஒருவர் தனது தினசரி உடற்பயிற்சிகளைத் தவிர்க்கலாம். அத்துடன் அதிகப்படியான சாப்பாட்டின் விளைவாக, தேவையற்ற எடை அதிகரிப்பும் நிகழலாம். எனவே நீங்கள் என்ன செய்ய வேண்டும்?
கவலைப்பட வேண்டாம், ஆயுர்வேத பயிற்சியாளர் டிக்ஸா பவ்சர்’ இன்ஸ்டாகிராமில் கோடைகாலத்தில் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும் 5 குறிப்புகளைப் பகிர்ந்து கொண்டார்.
காலையில் சிறிது சாப்பிடவும்
கோடையில், ஜீரண திறன் (அக்னி) ஒப்பீட்டளவில் குறைவாக இருக்கும். எனவே, மூன்று முறை கனமான உணவை உட்கொள்வது உடல் எடையை அதிகரிக்கும். அதுபோல, காலையில் பசிக்கவில்லை என்றால் பழங்கள், காய்கறி சாறுகள் அல்லது நட்ஸ் போன்ற மிக இலகுவான உணவுகளை காலை உணவாக எடுத்துக் கொள்வது நல்லது.
குளிர்ச்சியான மூலிகை தேநீர் குடிக்கவும்
வெப்பநிலை அதிகரிக்கும் போது, நமது உடலுக்கு ஹோமியோஸ்டாஸிஸ் (homeostasis) பராமரிக்க அதிக தண்ணீர் மற்றும் குளிர்பானங்கள் தேவை. எனவே, மண் பானைகளில் இயற்கையாகக் குளிரூட்டப்பட்ட தண்ணீரை போதுமான அளவு குடிப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். கார்பனேற்றப்பட்ட பானங்களை விட புதினா, கொத்தமல்லி மற்றும் வெள்ளரிக்காய் போன்ற குளிர்ச்சியான மூலிகைகளைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் பானங்களும் நல்லது.
செம்பருத்தி, புதினா, சீரகம், பெருஞ்சீரகம், கொத்தமல்லி, கெமோமில், ரோஸ், லாவெண்டர், பிராமி போன்ற குளிர்ச்சியான மூலிகை டீகளை பருகுவதும் உங்கள் எடையை பராமரிக்க உதவும்.
பழச்சாறுகளை விட பழங்களை தேர்வு செய்யவும்
கோடை காலம் பழங்களுக்கு பெயர் பெற்றது, மேலும் மில்க் ஷேக்குகள் மற்றும் பழச்சாறுகளை சாப்பிட நாம் அடிக்கடி ஆசைப்படுகிறோம். ஆனால் ஆயுர்வேதம் பழங்களை பாலுடன் சாப்பிட பரிந்துரைக்கவில்லை. எனவே அவற்றை ஒன்றாக சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. நல்ல தூக்கம் மற்றும் குளிர்ச்சிக்காக தூங்கும் நேரத்தில் பால் சாப்பிடுங்கள்;
பழங்களை காலை உணவாகவோ அல்லது மதிய சிற்றுண்டியாகவோ, தனித்தனியாக சாப்பிடுங்கள்.
மேலும், பழச்சாறுகளில் குறைந்த நார்ச்சத்து, அதிக சர்க்கரை மற்றும் அதிக கலோரிகள் உள்ளன, எனவே பழச்சாறுகளை குடிப்பதை விட பழங்களை சாப்பிடுங்கள், அவற்றை மென்று சாப்பிடுவது செரிமானம் மற்றும் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது.
இரவு உணவிற்குப் பிறகு எதையும் சாப்பிடுவதை நிறுத்துங்கள்
கோடையில், நாட்கள் நீண்டதாகவும், வெப்பமாகவும் இருக்கும், இரவுகள் குறுகியதாகவும் குளிராகவும் இருக்கும். இரவு 10 மணி முதல் அதிகாலை 2 மணி வரையிலான காலம் பித்தம் ஆதிக்கம் மற்றும் பசியைத் தூண்டும் என்பதால், சில சமயங்களில் இரவு உணவிற்குப் பிறகு கூட பசியாக இருக்கும்.
ஆனால் அந்த நேரத்தில் உணவு உட்கொள்வதால் அஜீரணம் ஏற்படும் மற்றும் எடை கூடும். சூரிய அஸ்தமனத்திற்கு முன் அல்லது இரவு 8 மணிக்குள் இரவு உணவை உட்கொள்வது நல்லது, மேலும் இரவில் தாமதமாக சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.
நீங்கள் மிகவும் பசியாக இருந்தால், தூங்கும் போது ½ கிளாஸ் பசும்பால் குடியுங்கள், இது நல்ல தூக்கத்தையும் அடுத்த நாள் காலை குடல் இயக்கத்தையும் எளிதாக்குகிறது.
சுறுசுறுப்பாக இருங்கள்
தினமும் லேசான உடற்பயிற்சி செய்வது கட்டாயமாகும் (இது உங்களை சோர்வடையச் செய்யாது).
நடைபயிற்சி, நடனம், குளிரூட்டும் பிராணயாமா, நீச்சல், பைலேட்ஸ், கார்டியோ, யோகா ஆசனங்கள் போன்றவற்றை நீங்கள் தேர்வு செய்யலாம்.
“கோடை காலத்தில் உடல் எடை அதிகரிப்பதைத் தடுக்க இந்த 5 குறிப்புகளைப் பின்பற்றவும். உணவு உண்பதாலும், அதிக ஓய்வெடுப்பதாலும், உடல் சுறுசுறுப்பு குறைவாக இருப்பதாலும் நீங்கள் பெற்றுள்ள அதிக எடையைக் குறைக்கவும் இது உதவுகிறது,” என்கிறார் டாக்டர் பவ்சர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.