/indian-express-tamil/media/media_files/2024/12/19/oQvQrk0nD0ZvFHQIvsNi.jpg)
சிலருக்கு தலைமுடியை சீவும் போது கொத்துக் கொத்தாக கொட்டும் நிலை இருக்கும். இதன் காரணமாக முடியில் அடர்த்தி இல்லாமல் இருக்கும். தற்போதைய காலகட்டத்தில் வயது பேதமின்றி எல்லோருக்கும் இந்தப் பிரச்சனை இருக்கிறது. குறிப்பாக, ஆண் மற்றும் பெண் என அனைத்து பாலினத்தவரும் முடி உதிர்வால் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
இதற்கு பல்வேறு காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. உதாரணமாக, உணவு முறை மாற்றம், வாழ்க்கை முறை மாற்றம், சத்துக் குறைபாடு மற்றும் தூக்கமின்மை போன்ற காரணங்களால் முடி உதிர்வு ஏற்படலாம் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.
முடி உதிர்வை குறைக்க ஒரு ஹேர்பேக் தயாரித்து பயன்படுத்தலாம். இதற்காக கடைகளில் இருந்து விலை உயர்ந்த இரசாயனம் சேர்க்கப்பட்ட பொருட்களை வாங்கி பயன்படுத்த வேண்டும் என்ற அவசியம் கிடையாது. எளிதாக வீட்டில் இருக்கும் பொருட்களை உபயோகித்து இந்த ஹேர்பேக்கை தயாரிக்கலாம்.
ஒரு பாத்திரத்தில் மூன்று ஸ்பூன் அளவிற்கு வெந்தயம் எடுத்து அதனை ஒரு கிளாஸ் தண்ணீரில் இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். மறுநாள் காலை இந்த வெந்தயத்துடன் 5 பல் பூண்டு சேர்த்து பசை பதத்திற்கு அரைக்க வேண்டும். இவ்வாறு அரைத்த பின்னர், இத்துடன் இரண்டு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து கலக்க வேண்டும் இவ்வாறு செய்தால் ஹோம்மேட் ஹேர்பேக் தயாராகி விடும்.
இதனை தலை முடியில் தேய்த்து விட்டு சுமார் 30 நிமிடங்கள் கழித்து குளித்து விடலாம். இவ்வாறு வாரத்திற்கு இரண்டு முறை என தொடர்ச்சியாக செய்தால் ஒரு மாதத்தில் முடி உதிர்வு பிரச்சனை குறையத் தொடங்கும். இதில் இரசாயனங்கள் சேர்க்காததால் ஒவ்வாமை அல்லது பக்க விளைவுகள் ஏற்படும் அபாயமும் கிடையாது.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.