காரைக்காலில், ஸ்ரீகயிலாசநாதர், ஸ்ரீ நித்யக்கல்யாணப் பெருமாள் தேவஸ்தானத்திற்கு சொந்தமான ஸ்ரீகாரைக்கால் அம்மையார் ஆலயத்தின் கும்பாபிஷேக விழா இன்று (மே 4) விமரிசையாக நடைபெற்றது.
இந்நிகழ்வில், புதுச்சேரி சட்டப்பேரவையின் சபாநாயகர் செல்வம், குடிமை பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் பி.ஆர்.என். திருமுருகன், தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஏ.எம்.எச். நாஜிம், திருநள்ளாறு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர். சிவா, நிரவி திருப்பட்டினம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் என். நாக தியாகராஜன் உள்ளிட்ட அறங்காவலர் குழு நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக, கடந்த 2008-ஆம் ஆண்டில் இந்த ஆலயத்தில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதையடுத்து, நடப்பு ஆண்டிற்கான கும்பாபிஷேகம் நடத்த கடந்த ஆண்டு அக்டோபர் 21-ஆம் தேதி அன்று பாலாலயம் மற்றும் திருப்பணி நடைபெற்றது. இப்பணிகள் அனைத்தும் முழு வீச்சில் நடத்தி முடிக்கப்பட்டன.
இந்நிலையில், கும்பாபிஷேகத்தின் தொடக்கமாக கடந்த 30-ஆம் தேதி கணபதி ஹோமமும், ஏப்ரல் 1-ஆம் தேதி யாகசாலை பூஜையும் நடைபெற்றது. இந்நிலையில், இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, ஸ்ரீசோமநாதர், ஸ்ரீ சோமநாயகி, ஸ்ரீ காரைக்கால் அம்மையார் உள்ளிட்ட மூலவர்களுக்கு மகாபிஷேகமும், மகாதீபாராதனையும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் மேற்கொண்டனர்.
63 நாயன்மார்களில் மூவர் மட்டுமே பெண் நாயன்மார்கள் என்பதும், அதில் 24-வது இடத்தை காரைக்கால் அம்மையார் பெற்றுள்ளார் என்றும் கூறப்படுகிறது.