நாடு முழுவதும் உள்ள நுகர்வோர் மற்றும் உணவு விற்பனையாளர்கள் உணவுகளை பேக்கிங் செய்வதற்கும், பரிமாறுவதற்கும் செய்தித்தாள்களைப் பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்துமாறு, இந்திய உணவுப் பாதுகாப்பு தரக் கட்டுப்பாட்டு ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
டீக்கடைகள், சாலையோரக் கடைகளில் எண்ணெய்யில் பொரித்த பஜ்ஜி, போண்டா. வடை. முறுக்கு போன்ற உணவுகளை செய்தித் தாளில் வைத்து பொது மக்களுக்கு வழங்கப்படுகிறது. இதனால் பல்வேறு உடல்நல பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
அச்சிடப்பட்ட காகிதங்களில் உணவை மடித்துத் தருவதால், அதில் மை மற்றும் பதப்படுத்தப் பயன்படுத்தப்படும் ரசாயனங்கள், செயற்கை நிறங்கள் போன்றவை உடலுக்குள் செல்லும். வயதானவர்களுக்கும் குழந்தைகளுக்கும் இதனால் உடனடி விளைவுகள் ஏற்படும்.
தவிர, செய்தித்தாள்களில் நோய்க்கிருமிகள் மற்றும் நுண்ணுயிர்கள் இருக்கும் என்பதால், அவை உணவுடன் கலந்து குடலுக்குள் சென்றுவிடும் வாய்ப்புகள் உண்டு. இதனால் தொற்றுப் பிரச்னைகள் ஏற்படலாம்.
உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் (பேக்கேஜிங்) விதிமுறைகள், 2018, இது உணவைச் சேமித்து வைப்பதற்கும் பேக்கிங் செய்வதற்கும், செய்தித்தாள்கள் அல்லது அதைப் போன்ற பொருட்களைப் பயன்படுத்துவதை கண்டிப்பாகத் தடை செய்கிறது.
இந்த விதிமுறையின்படி, உணவை மூடி வைக்கவோ அல்லது பரிமாறவோ அல்லது பொரித்த உணவில் இருந்து அதிகப்படியான எண்ணெயை உறிஞ்சவோ செய்தித்தாள்கள் பயன்படுத்தக்கூடாது.
எனவே, உணவுப் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, அனைத்து உணவு விற்பனையாளர்களும் தங்கள் வாடிக்கையாளர்களின் நலனுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் பொறுப்பான பேக்கேஜிங் நடைமுறைகளைக் கடைப்பிடிக்குமாறு இந்திய உணவுப் பாதுகாப்பு தரக் கட்டுப்பாட்டு ஆணையத்தின் CEO, G. கமலா வர்தன ராவ், வலியுறுத்தியுள்ளார்.
உணவுப் பொருட்களை பேக்கேஜிங் செய்ய செய்தித்தாள்களைப் பயன்படுத்துவதைத் தடைசெய்வதற்கும், மக்கள் மத்தியில் இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் மாநிலங்களின் உணவு அதிகாரிகளுடன் நெருக்கமாகப் பணியாற்றி வருகிறது, என்று இந்திய உணவுப் பாதுகாப்பு தரக் கட்டுப்பாட்டு ஆணையம் கூறியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“