மதுரை - பெங்களூர் கண்டோண்மென்ட் வந்தே பாரத் ரயில் சேவை கடந்த சனிக்கிழமை அன்று தொடங்கி வைக்கப்பட்டது. இந்த ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலம் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
மதுரை ரயில் நிலையத்தில் நடைபெற்ற விழாவில் மத்திய ரயில்வே துறை மற்றும் ஜல் சக்தி துறை இணை அமைச்சர் வி. சோமன்னா மற்றும் மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் பார்வையாளர்களாக முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்களும் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், இந்த விழாவில் பேரையூர் பகுதியில் இருந்து 101 வயதான சுதந்திர போராட்ட வீரர் அழகம் பெருமாளும் கலந்து கொண்டது முக்கிய அம்சமாக பார்க்கப்பட்டது.
/indian-express-tamil/media/post_attachments/31ffe4cb-49b.jpg)
அழகம் பெருமாள் பின்னணி
சுதந்திர போராட்ட வீரரான அழகம் பெருமாள் 1924 ஆம் ஆண்டு மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா டி. கிருஷ்ணாபுரம் கிராமத்தில் பிறந்தவர். இவர் 1942 ஆம் ஆண்டு மதுரை ரயில் நிலையம் எதிரே ஆகஸ்ட் புரட்சியான "வெள்ளையனே வெளியேறு" சுதந்திர போராட்டத்தில் பங்கேற்றவர். இதன் காரணமாக இவர் ஆங்கிலேய அரசால் கைது செய்யப்பட்டு 6 மாதங்கள் கர்நாடக மாநிலம் பெல்லாரி மாவட்டத்தில் உள்ள அல்லிபுரம் சிறையில் அடைக்கப்பட்டார்.
அழகம் பெருமாள் மிகப் பெரிய தமிழ் ஆர்வலர் ஆவார். சமீபத்தில் வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியில் நடந்த விழாவில் 1330 திருக்குறளையும் ஒரு மணி 40 நிமிடத்தில் ஒப்பித்து சாதனை புரிந்துள்ளார். மேலும், திருக்குறளில் நவரசம் என்ற தலைப்பில் 120 பக்கத்தில் ஆய்வு கட்டுரை ஒன்றை மதுரை உலக தமிழ்ச்சங்கம் மூலமாக தமிழக அரசுக்கு சமர்ப்பித்துள்ளார். திருக்குறளில் உள்ள 1300 -க்கும் மேற்பட்ட பழம் தமிழ்ச் சொற்களுக்கு பொருள் பதங்களும் எழுதியுள்ளார். இப்போது இவரின் புகைப்படம் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
செய்தி: சக்தி சரவணன் - மதுரை மாவட்டம்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“