/indian-express-tamil/media/media_files/2025/08/20/ganesh-chaturthi-2025-2025-08-20-17-15-05.jpg)
Ganesh Chaturthi in 2025: Date, Puja Timings, Significance, and Celebrations
விநாயகர் சதுர்த்தி ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறைச் சதுர்த்தி நாள் அன்று கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் பிள்ளையாரை வழிபட்டால் எல்லா பாக்கியங்களும் நமக்கு கிடைக்குமென்று சாஸ்திரங்கள் சொல்கின்றன. 10 நாட்கள் கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி, இந்த ஆண்டு ஆகஸ்ட் 27, 2025, புதன்கிழமை அன்று தொடங்குகிறது.
விநாயகர் செல்வம், அறிவியல், அறிவு, ஞானம் மற்றும் செழிப்பு ஆகியவற்றின் கடவுள் என்று அறியப்படுகிறார், அதனால்தான் இந்துக்கள், எந்த முக்கியமான வேலையைத் தொடங்குவதற்கு முன்பும், அவரை நினைவில் வைத்து, அவருடைய ஆசீர்வாதத்தைப் பெறுகிறார்கள்.
விநாயக சதுர்த்தி வரலாறு
விநாயகர் சதுர்த்தி விழா, முதலில் 17-ஆம் நூற்றாண்டில் மராத்தா பேரரசில், வீர சிவாஜி மன்னரால் தேசபக்தியை வளர்க்கும் நோக்கில் தொடங்கப்பட்டது. பின்னர், பிரிட்டிஷ் ஆட்சியின்போது, சுதந்திரப் போராட்ட வீரர் லோக்மான்ய திலகர், மக்களை ஒன்றிணைக்கவும், சுதந்திர உணர்வை தூண்டவும் இந்த விழாவைப் பயன்படுத்தினார்.
இந்து புராணங்களின்படி, பார்வதி தேவி தன் உடலில் உள்ள அழுக்கில் இருந்து விநாயகரை உருவாக்கி, தனக்குக் காவலாக நிறுத்தினார். சிவபெருமான் கோபத்தில் விநாயகரின் தலையைக் கொய்தார். பின்னர், பார்வதியின் துயரத்தைக் கண்ட சிவபெருமான், ஒரு யானையின் தலையை விநாயகருக்குப் பொருத்தினார். இதனால் விநாயகர் யானைத் தலையுள்ள கடவுளாகப் போற்றப்படுகிறார்.
வழிபாடு
விநாயகர் சதுர்த்தி அன்று அதிகாலையில் எழுந்து, குளித்துவிட்டு, வீட்டை சுத்தம் செய்து, வாசலில் மாவிலை தோரணம் கட்டலாம். பூஜையறையில் சுத்தம் செய்து ஒரு மணையை வைத்து, அதன்மேல் கோலம் போட்டு, ஒரு தலை வாழை இலை வைக்க வேண்டும். இலையின் நுனி வடக்கு பார்த்தாற்போல இருக்க வேண்டும். இந்த இலையில் பச்சரிசியைப் பரப்பி வைத்து, நடுவில் களிமண்ணாலான பிள்ளையாரை வைக்க வேண்டும்.
அன்றைய தினம் விநாயகருக்கு மிகவும் பிடித்த கொழுக்கட்டை செய்வது சிறப்பு. அதனுடன் எள்ளுருண்டை, பாயசம், வடை உடன் நைவேத்யம் படைக்கலாம். மேலும் பால், தேன், வெல்லம், முந்திரி, அவல் ஒவ்வொன்றிலும் சிறிதளவு எடுத்து ஒன்றாகக் கலந்து அதையும் நைவேத்யம் செய்யலாம்.
இந்த விரதத்தை கடைபிடிப்பதால் தொழில், வியாபாரம் செய்பவர்கள் படிப்படியாக முன்னேற்றத்தைக் காண்பார்கள். அதில் ஏற்பட்டுள்ள கடன் தொல்லைகளில் இருந்தும் மீண்டு வர முடியும் என்பது நம்பிக்கை.
பிறகு இந்த விநாயகர் சிலைகளை நீரில் கரைக்கின்றனர். பாரம்பரியமாக இது, விநாயகர்’ நம் கவலைகள் அனைத்தையும் அகற்றி, அவருடைய ஆசீர்வாதங்களை விட்டுச் செல்வதாகக் கருதப்படுகிறது.
பூஜை நேரம்:
இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா, ஆகஸ்ட் 27, 2025, புதன்கிழமை அன்று தொடங்குகிறது. சதுர்த்தி திதி ஆகஸ்ட் 26 அன்று பிற்பகல் 1:54 மணிக்குத் தொடங்கி, ஆகஸ்ட் 27 அன்று பிற்பகல் 3:44 மணிக்கு முடிவடைகிறது. விநாயகர் பூஜைக்கான மதிய நேர முஹூர்த்தம் ஆகஸ்ட் 27 அன்று காலை 11:06 முதல் பிற்பகல் 1:40 வரை உள்ளது.
விநாயகர் விசர்ஜனம் (சிலை கரைத்தல்):
பத்து நாள் கொண்டாட்டங்களுக்குப் பிறகு, விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்கும் நிகழ்ச்சி நடைபெறும். இந்த ஆண்டு, விநாயகர் விசர்ஜனம் செப்டம்பர் 6, 2025, சனிக்கிழமை அன்று நடைபெறும்.
விநாயகர் சதுர்த்தி என்பது வெறும் சடங்கு மட்டுமல்ல, இது சமூகத்தை ஒன்றிணைக்கும் ஒரு விழா. மக்கள் தங்கள் வீடுகளில் களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை வைத்து வழிபடுகிறார்கள். பத்தாவது நாளில், ஊர்வலமாகச் சென்று சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பார்கள். இந்த விழா ஒற்றுமை, நம்பிக்கை மற்றும் மகிழ்ச்சியின் அடையாளமாகக் கொண்டாடப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.