டாக்டர் டி எஸ் கிளர்
மாரடைப்பு, எந்த நேரத்திலும் யாரையும் தாக்கலாம். இருப்பினும், பெரும்பாலான மக்கள் அதிகாலை நேரங்களில் மாரடைப்புக்கு ஆளாவதாக நிபுணர்கள் கூறுகிறார்கள்.
குளிர்காலத்தில் பொதுவாக காலையில் ஏற்படும் திடீர் மரணங்கள், நம் அனைவருக்கும் கவலையை ஏற்படுத்துகின்றன. உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் மட்டும் 98 பேர் மாரடைப்பு மற்றும் மூளைச்சாவு காரணமாக இறந்ததாக சமீபத்திய அறிக்கை ஒன்று கூறுகிறது.
திடீர் மாரடைப்பு மரணம் என்றால் என்ன?
உங்கள் இதயத்தின் மின் அமைப்பு செயலிழந்து, திடீரென்று ஒழுங்கற்றதாக மாறும்போது திடீர் மாரடைப்பு ஏற்படுகிறது.
இது நிகழும்போது, இதயம் தெளிவாக ஆக்ஸிஜனேற்றப்பட்ட ரத்தத்தை பம்ப் செய்து உங்கள் உடலின் மற்ற பகுதிகளுக்கு அனுப்ப முடியாது. மேலும் ஒரு நபர் அறிகுறிகள் தோன்றிய ஒரு மணி நேரத்திற்குள் அவசர சிகிச்சை செய்யாவிட்டால், தனது உயிரை இழக்க நேரிடும்.
குளிர் கால காலை மாரடைப்புக்கான தூண்டுதல்கள் என்ன?
நாம் புரிந்து கொள்ள வேண்டிய பல காரணங்கள் உள்ளன.
சர்க்காடியன் ரிதம்
முதலாவதாக, உடலின் சர்க்காடியன் தாளத்தில் சிக்கல் இருக்கலாம், இதை நாம் பொதுவாக நமது உள் உடல் கடிகாரம் என்று குறிப்பிடுகிறோம். இது நமது விழிப்பு மற்றும் சோர்வுக்கான நேரத்தை ஒழுங்குபடுத்துவதற்கு பொறுப்பாகும். இது நாள் முழுவதும் குறைகிறது மற்றும் உயர்கிறது, உங்கள் உடலில் சில ரசாயனங்கள் வெளியீட்டைத் தூண்டுகிறது. சர்க்காடியன் தாளத்தில் சிக்கல்கள் இருக்கும்போது, இந்த ரசாயனங்களின் ஏற்றத்தாழ்வு இருக்கலாம்.
காலை 6.30 மணியளவில், சர்க்காடியன் அமைப்பு அதிக அளவு PAI-1 செல்களை அனுப்புகிறது, இது இரத்தக் கட்டிகளை உடைப்பதைத் தடுக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் ஏற்கனவே கண்டறிந்துள்ளனர். ரத்தத்தில் PAI-1 செல்கள் அதிகமாக இருந்தால், மாரடைப்புக்கு வழிவகுக்கும் இரத்த உறைவுக்கான ஆபத்து அதிகம். இது பொதுவாக அதிகாலை 4 மணி முதல் 6 மணி வரை நடக்கும்.
உயர் ரத்த அழுத்தம் (BP)
உடலின் மையப் பகுதிகளை சூடாக வைத்திருக்க ரத்த நாளங்கள் சுருங்கும்போது, இதயத்தை மேலும் பம்ப் செய்ய கட்டாயப்படுத்துகிறது. இது ரத்த அழுத்தத்தை உயர்த்துகிறது. எனவே, உங்கள் இதயத் துடிப்பு அல்லது நாடித்துடிப்பு வீதத்தில் ஏற்ற இறக்கங்களைக் கண்டால் குளிர்ந்த காலநிலையில் வெளியே செல்வதைத் தவிர்க்கவும். வீட்டிற்குள்ளேயே தங்கி, கம்பளிகளால் போர்த்திக்கொள்வது நல்லது. உயர் ரத்த அழுத்தம், ஏற்கனவே உள்ள பிளேக்குகளை உடைக்க அழுத்தம் கொடுக்கிறது, இதனால் திடீர் அடைப்பு ஏற்படுகிறது.
காற்று மாசுபாடு
உங்கள் காற்றின் தரக் குறியீடு 450ஐ விட அதிகமாக இருக்கும்போது, சுவாசத்தின் போது சாதாரண காற்று ஓட்டத்தைத் தடுக்கும் துகள்களை நீங்கள் சுவாசிக்கும்போது, அது ரத்தம் உறைவதற்கு வழிவகுக்கிறது. இந்த மாசு உங்கள் உடல் திசுக்களில் அழற்சியை ஏற்படுத்துகின்றன மற்றும் பிளேட்லெட்டுகள் உடலில் உள்ள அழற்சியுடன் தங்களை இணைத்துக் கொள்ளும் போக்கைக் கொண்டுள்ளன, இதனால் மூச்சுத் திணறல் மற்றும் ரத்தம் உறைதல் ஏற்படுகிறது.
சரியான திரவ உட்கொள்ளல் இல்லாமை
பலர் இதை உணரமாட்டார்கள், ஆனால் கடுமையான குளிரில் போதுமான தாகம் ஏற்படாததால், பலர் சரியாக நீர் அருந்த மாட்டார்கள். இது கடுமையான நீரிழப்பு பிரச்சினைகளுக்கு வழிவகுக்கிறது, ரத்தம் ஒட்டும் தன்மை மற்றும் உறைதல் உருவாவதை துரிதப்படுத்துகிறது. இதேபோல் அதிகமாகவும் தண்ணீர் குடிக்கக் கூடாது. ஏனெனில் குறைந்த வெப்பநிலையில் வியர்வை இல்லாததால், நுரையீரலில் கூடுதல் திரவம் சேரலாம் மற்றும் கார்டியோ -வாஸ்குலர் அமைப்புக்கு அழுத்தம் கொடுக்கலாம். எனவே போதுமான அளவு தண்ணீர் குடிக்கவும்.
குறைந்த அளவு வைட்டமின் டி
குளிர்காலத்தில் சூரிய ஒளி இல்லாத நிலையில், நம் உடல்கள் வைட்டமின் D ஐ ஒருங்கிணைக்க முடியாது, இது உண்மையில் மாரடைப்புக்கு பிறகு, இதயத்தில் வடு திசுக்களை உருவாக்குவதைத் தடுக்கிறது. எனவே, வைட்டமின் டி சப்ளிமெண்ட்ஸ் தேவை.
தடுப்பு
வாரத்திற்கு ஒரு முறையாவது உங்கள் ரத்த அழுத்தத்தை கண்காணிக்க வேண்டியது அவசியம். 24 மணி நேர மாறுபாடுகளைக் கவனிக்க, ஒவ்வொரு நாளிலும் வெவ்வேறு நேரங்களில் உங்கள் நிலைகளைச் சரிபார்க்கவும்.
வெளியே செல்லும் போது சரியான ஆடைகளை அணியுங்கள்.
வீட்டிற்கு வெளியே செய்யும் உடற்பயிற்சிகளை தவிர்க்கலாம், அதற்கு பதிலாக மருத்துவரின் ஆலோசனையின்படி வீட்டிற்குள் செய்யும் டிரெட்மில், எடை மற்றும் யோகா போன்ற மிதமான பயிற்சிகளை செய்யலாம். வயதானவர்களுக்கு டிரெட்மில்லை விட static cycling ஒரு நல்ல கார்டியோ-வாஸ்குலர் செயல்பாடாக பரிந்துரைக்கிறேன், ஏனெனில் அது அவர்களின் முழங்கால்கள் மற்றும் மூட்டுகளில் அழுத்தம் கொடுக்காது. சிறிய அளவிலான சைக்கிள் ஓட்டுதல் கூட இதய நோய்களின் விகிதங்களைக் குறைக்கும்.
கோடைகாலத்தை விட குளிர்கால பரிசோதனைகள் மிகவும் தேவைப்படுகின்றன, எனவே உங்கள் இருதயநோய் நிபுணரின் ஆலோசனைப்படி பின்தொடர்தல்களைத் தவறவிடாதீர்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“