Healthy food Tamil News: தென்னிந்திய உணவுகளில் பிரபலமான உணவாக இட்லி உள்ளது. அந்த இட்லி மாவில் செய்யப்படும் தோசை, ஆப்பம் போன்றவை தவிர்க்க முடியாத காலை உணவாகவும் உள்ளன. இவற்றை பக்குவமாக செய்வதற்கு சிலர் அதிகமாவே மெனக்கிடுகிறார்கள். மேலும் மாவு அரைக்க சிரமப்படும் நம்மில் பலர் கடைகளில் விற்கும் மாவை பயன்படுத்துகிறோம்.
இட்லி, தோசை, ஆப்பம் போன்றவற்றை சிம்பிளாவும், எளிமையாவும் ஒரே மாவில் தயார் செய்ய, மாவு எப்படி அரைக்க வேண்டும் என்ற பக்குவத்தை இங்கு பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
5 கப் - இட்லி அரிசி
1 கப் - உளுந்து
1/4 கப் - வெள்ளை அவல்
1 ஸ்பூன் - வெந்தயம்
3 ஸ்பூன் - உப்பு
நீங்கள் செய்ய வேண்டியவை
அரிசி , உளுந்து , அவல் ஆகிய மூன்றையும் ஒரே அளவுள்ள கப்பில் எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் அரிசியை தனி பாத்திரத்திலும், அவல், உளுந்து வெந்தயம் ஆகிய மூன்றையும் ஒரு பாத்திரத்திலும் எடுத்து 4 மணி நேரம் நன்றாக ஊற வைக்க வேண்டும். தேவைப்பட்டால் சிறிதளவும் ஜவ்வரிசி சேர்த்துக்கொள்ளலாம்.
இப்போது நாம் முதலில் ஊற வைத்த உளுந்துக் கலவையை அரைக்க வேண்டும். நாம் அரைக்கும் போது அவை கெட்டியாக பஞ்சு போல் உப்பி வரும். அப்படி தோன்றினால் அவை நன்கு அரைத்து விட்டன என்று அர்த்தம். பிறகு அவற்றை ஒரு பாத்திரத்தில் தனியாக எடுத்து வைத்து விடலாம்.
பின்னர் நாம் ஊற வைத்துள்ள அரிசியை நொறு நொறுவென அரிசி பதத்திற்கு அரைத்து வைத்துக்கொள்ளவும். இதற்கிடையில் தேவையான அளவு உப்பு சேர்க்க வேண்டும். பின்னர் நாம் முன்பு அரைத்து வைத்துள்ள உளுந்த மாவையும் சேர்த்து அரைத்து கொள்ளலாம். அல்லது அரிசி மாவு அரைத்த பின்னர் இரண்டையும் ஒன்றாக மிக்ஸ் செய்து கொள்ளலாம்.
நாம் அரைத்து வைத்துள்ள இந்த மாவு கலவை ஒரு பாத்திரத்தில் எடுத்து தனியாக வைத்துக் கொள்ளவேண்டும். பிறகு 7 முதல் 8 மணி நேரம் தனியாக ஓர் இடத்தில் வைத்தால் மாவு புளித்து உப்பி வரும்.
இப்போது அவற்றை இட்லி, தோசை, ஆப்பம் என விதவிதமாக சுட்டு சாப்பிடலாம். இவற்றுக்கு சைடிஸாக தக்காளி தொக்கு, தேங்காய் பால், கொத்தமல்லி அல்லது புதினா சட்னி போன்றவற்றுடன் சேர்த்து ருசிக்கலாம்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற " (https://t.me/ietamil)