/indian-express-tamil/media/media_files/2025/02/24/W1Gx20Yktbubk8wTxodI.jpg)
நம் அன்றாட பணிகளை செய்யும் போது அவற்றை எளிமையாகவும், திறம்படவும் முடிப்பது எப்படி என யோசிப்போம். அந்த வகையில் நமக்கு தேவையான சில பயனுள்ள டிப்ஸை தற்போது காண்போம்.
நம் வீட்டில் பயன்படுத்தும் தீப்பெட்டிகள் சில நேரத்தில் தண்ணீரில் விழுந்து விடும். அப்போது, தீக்குச்சிகளை உரசுவதற்கு மிகவும் சிரமமாக இருக்கும். இதற்கு ஒரு சூப்பர் டிப்ஸ் இருக்கிறது. அதன்படி, முகத்திற்கு பயன்படுத்தும் பௌடரை தீப்பெட்டியின் பக்கவாட்டில் தேய்த்தால், எளிமையாக அதனை பற்ற வைக்கலாம்.
ஃப்ரிட்ஜில் வைத்த தக்காளியை வெட்டி உடனடியாக சமையலுக்கு பயன்படுத்தும் போது, அவற்றில் இருக்கும் ஈரப்பதம் காரணமாக அவை சீக்கிரம் வேகாது. அப்போது, தக்காளியின் மீது சிறிதளவு உப்பு தூவிக் கொள்ளலாம். இப்படி செய்தால் தக்காளி சீக்கிரமாக வெந்து விடும்.
தலைக்கு பூ வைக்கும் போது, அன்றைய தினம் பெண்கள் உடுத்தியிருக்கும் துணியின் நிறத்திற்கு ஏற்றார் போல் சில செயற்கை பூக்களையும், சேர்த்து கட்டியிருப்பார்கள். சிலருக்கு இவ்வாறு செயற்கை பூக்களை பயன்படுத்த பிடிக்காமல் இருக்கும். இது போன்ற நேரத்தில் நாம் பயன்படுத்தும் நெயில் பாலிஷ் கொண்டு நமக்கு தேவையான அளவு பூக்களுக்கு வண்ணம் தீட்டி பயன்படுத்தலாம். இவை பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.
மேலும், சிலருக்கு நெருக்கமாக பூக்கள் கட்ட தெரியாது. அவர்கள் அனைவரும் 5 பூக்களாக மட்டும் தனித்தனியாக கட்டி, அவற்றை ஒவ்வொரு பகுதிகளாக வெட்டி எடுத்துக் கொள்ளலாம். இப்போது, ஒரு உருளைக் கிழங்கு மீது ஊசியில் நூலை நுழைத்து குத்தி வைக்க வேண்டும். இறுதியாக, தனித்தனியாக கட்டி வைத்திருந்த பூக்களை இவற்றில் மொத்தமாக கோர்த்து விடலாம். இப்படி செய்வதற்கும் எளிமையாக இருக்கும், பூக்களும் நெருக்கமாக கட்டியதை போன்று இருக்கும்.
வீட்டில் பெருங்காயம் தீர்ந்து போனதும் அதன் டப்பாவை தூக்கி குப்பையில் போட்டு விடுவோம். ஆனால், அந்த டப்பாவை கழுவி விட்டு, அதில் கோதுமை மற்றும் மைதா மாவுகளை நிரப்பிக் கொள்ளலாம். இப்படி செய்தால் சப்பாத்தி மற்றும் பூரி மாவை கல்லில் வைத்து தேய்க்கும் போது அவற்றின் மீது தூவுவதற்கு வசதியாக இருக்கும்.
நன்றி - Nalini Manick Cooking Youtube Channel
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.