/indian-express-tamil/media/media_files/2025/09/02/cancer-registry-maps-2025-09-02-16-52-27.jpg)
ஆண்கள், பெண்களுக்கு அதிகரிக்கும் புற்றுநோய்: 4 ஆண்டுகால ஆய்வு முடிவுகளில் அதிர்ச்சி தகவல்
புற்றுநோய் குறித்த சமீபத்திய ஆய்வில், பல்வேறு முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்தியாவின் 43 புற்றுநோய் பதிவேடுகளில் 2015 முதல் 2019 வரையிலான காலகட்டத்தில் சேகரிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வுக் காலத்தில், 7.08 லட்சம் புற்றுநோயாளிகள் மற்றும் 2.06 லட்சம் உயிரிழப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஆய்வின் முக்கிய அம்சங்கள்:
நாட்டில் புற்றுநோய் பாதித்தவர்களில் பெண்களின் விகிதம் அதிகமாக உள்ளது (51.1%). ஆனால், புற்றுநோயால் ஏற்படும் உயிரிழப்புகளில் பெண்களின் விகிதம் குறைவாக உள்ளது (45%). இதற்குக் காரணம், பெண்களுக்கு ஏற்படும் மார்பக மற்றும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய்கள் ஆரம்ப நிலையிலேயே கண்டறியப்படுகின்றன. இந்த வகை புற்றுநோய்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.
ஆண்களுக்கு ஏற்படும் முக்கிய புற்றுநோய்களான வாய், நுரையீரல், கல்லீரல், இரைப்பை மற்றும் உணவுக்குழாய் புற்றுநோய்கள், பெரும்பாலும் தாமதமாகக் கண்டறியப்படுவதால், இறப்பு விகிதம் அதிகமாக உள்ளது.
ஆண்களுக்கு வாய் புற்றுநோய் அதிகரிப்பு:
ஆண்களிடையே நுரையீரல் புற்றுநோயை விட வாய் புற்றுநோய் மிகவும் பொதுவான வகையாக மாறியுள்ளது. புகையிலைப் பயன்பாடு குறைந்த போதிலும், வாய் புற்றுநோய் அதிகரித்துள்ளது. இதற்கு, புகையிலையின் விளைவுகள் வெளிப்பட 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆகும் நீண்ட கால தாமதம் ஒரு காரணமாக இருக்கலாம். மது அருந்துதல், மற்றொரு முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது. மது மற்றும் புகையிலை இரண்டையும் சேர்த்துப் பயன்படுத்தும்போது புற்றுநோய் ஆபத்து அதிகரிக்கிறது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
புதிய புள்ளிவிவரங்கள்:
2024-ஆம் ஆண்டில், நாடு முழுவதும் 15.6 லட்சம் புற்றுநோய் பாதிப்புகளும், 8.74 லட்சம் உயிரிழப்புகளும் ஏற்படலாம் என ஆராய்ச்சியாளர்கள் மதிப்பிட்டுள்ளனர். நாட்டின் மற்ற பகுதிகளைக் காட்டிலும் வடகிழக்கு மாநிலங்களில் புற்றுநோய் பாதிப்பு அதிகமாக உள்ளது. ஐஸ்வால் நகரில் ஆண்களில் ஒரு லட்சம் பேருக்கு 198.4 பேரும், பெண்களில் 172.5 பேரும் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர்.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க
இதற்கு, அப்பகுதிகளில் உள்ள மக்களின் வாழ்க்கைமுறை, உணவுப் பழக்கவழக்கங்கள் (புகையிலைப் பயன்பாடு, வெற்றிலை பாக்கு மெல்லுதல், பதப்படுத்தப்பட்ட உணவுகள்), மற்றும் தொற்று நோய்கள் முக்கிய காரணங்களாகக் கூறப்படுகின்றன.
புற்றுநோய் வகைகள் மற்றும் பரவல்:
மார்பகப் புற்றுநோய்: ஹைதராபாத்தில் ஒரு லட்சம் பேருக்கு 54 பேர் என்ற விகிதத்தில் மார்பகப் புற்றுநோய் அதிக அளவில் பதிவாகியுள்ளது. ஐஸ்வாலில் ஒரு லட்சம் பேருக்கு 27.1 பேர் என்ற விகிதத்தில் அதிகம் காணப்படுகிறது. அகமதாபாத், போபால், நாக்பூர், பிரயாக்ராஜ் போன்ற மத்திய மற்றும் மேற்குப் பகுதிகளில் அதிகம் உள்ளது. விசாகப்பட்டினம், பெங்களூரு, கொச்சி, சென்னை மற்றும் டெல்லி போன்ற தென்னிந்திய நகரங்களில் அதிகம் கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆய்வுக் கண்டறிதல்களின் அடிப்படையில், புற்றுநோய் சிகிச்சைக்கான உள்கட்டமைப்பு மற்றும் மனிதவளத்தை அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தை நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.