கர்நாடகாவில் எச்.எம்.பி.வி என்று சொல்லப்படக் கூடிய ஹூமன் மெட்டாநியூமோவைரசால் இருவர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்ஃப்ளூயன்ஸா அல்லது கோவிட்-19 அளவிற்கு இவை பரவலாக அறியப்படாவிட்டாலும், தீவிர சுவாச நோய்களை இந்த வைரஸ் உருவாக்கக் கூடியது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Two HMPV cases detected in Karnataka, no link to China surge: Know the symptoms, how it is transmitted
இந்திய அரசின் அறிக்கையின் படி, "நாடு முழுவதும் சுவாச நோய்களைக் கண்காணிக்க ஐ.சி.எம்.ஆர் இன் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில் இரண்டு பேரிடம் எச்.எம்.பி.வி கண்டறியப்பட்டுள்ளது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் 3 மாதங்கள் மற்றும் 8 மாதங்கள் நிரம்பிய குழந்தைகளிடம் இந்த வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
எச்.எம்.பி.வி தொற்று இந்தியா உட்பட உலகளவில் பல நாடுகளில் இருக்கிறது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், இந்தியாவில் தற்போது கண்டறியப்பட்ட வைரஸ் வெளிநாட்டில் இருந்து பரவவில்லை என்றும், குறிப்பாக சீனாவில் தற்போது பரவி வரும் வைரஸுக்கும், இதற்கும் சம்பந்தம் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், எச்.எம்.பி.வி தொற்றின் அறிகுறிகள் மற்றும் அவற்றை தடுப்பதற்கான வழிமுறைகளை தெரிந்து கொள்வது அவசியமாகும்.
எச்.எம்.பி.வி என்றால் என்ன?
"குளிர் காலங்களில் பரவும் சுவாச பிரச்சனைகளை ஏற்படுத்தும் ரெஸ்பிரட்டரி சின்கிடல் வைரஸ் பிரிவை சார்ந்தது எச்.எம்.பி.வி. இது சீனாவில் மட்டும் பரவுவது இல்லை. ஆசிய கண்டத்தில் இதன் பரவல் காணப்படுகிறது" என மருத்துவர் ரவி சேகர் ஜா குறிப்பிட்டுள்ளார்.
எச்.எம்.பி.வி உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துமா?
எச்.எம்.பி.வி தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பெரும்பாலும் உடல்நலக்குறைவு, சளி, இருமல் மற்றும் காய்ச்சல் இருக்கும் என மருத்துவர் ரவி சேகர் ஜா தெரிவித்துள்ளார். "வயதானவர்கள், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்கள் போன்றோர் இந்த வைரசால் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். எனினும், இந்த தொற்று அபாயகரமானதாக மாறுவதற்கு வாய்ப்பு மிக மிக அரிது" என்று அவர் விளக்கம் அளித்துள்ளார்.
எச்.எம்.பி.வி தொற்றின் பொதுவான அறிகுறிகள்:
எச்.எம்.பி.வி தொற்றின் அறிகுறிகள் குறித்து மருத்துவர் சிவகுமார் விளக்கம் அளித்துள்ளார்.
பாதிப்பு குறைவானவர்களுக்கு சளி, இருமல், தொண்டையில் அசௌகரியம் மற்றும் காய்ச்சல் காணப்படும்.
பாதிப்பு அதிகமானவர்களிடம் மூச்சுத் திணறல், மூச்சுக்குழாயில் அழற்சி போன்றவை ஏற்படும்.
"மிக அரிதாக கடுமையாக பாதிக்கப்பட்டவர்கள் சிலர் இருமும் போது இரத்தம் வெளியேறும். இத்தகைய அறிகுறிகள் இருப்பவர்கள் உடனடியாக மருத்துவ சிகிச்சையை பெற வேண்டும்" என்று மருத்துவர் ரவி சேகர் ஜா அறிவுறுத்துகிறார்.
எச்.எம்.பி.வி எவ்வாறு பரவுகிறது? இதை தடுப்பதற்கான வழிமுறைகள் என்ன?
"எச்.எம்.பி.வி தீவிரமாக பரவும் தன்மை கொண்டது. மற்ற சுவாச பிரச்சனைகளை போலவே நோயால் பாதிக்கப்பட்டவர்களின் நீர்த்துளிகளில் இருந்து இவை பரவுகிறது. அவர்களின் இருமல், எச்சில் போன்றவற்றில் இருந்து எச்.எம்.பி.வி வேகமாக பரவுகிறது" மருத்துவர் ரவி சேகர் ஜா குறிப்பிட்டுள்ளார்.
"சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வது அவசியம். நமது கைகளை சோப் மற்றும் தண்ணீர் கொண்டு சுமார் 20 விநாடிகள் கழுவ வேண்டும். கூட்டம் அதிகமாக இருக்கும் இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். கதவின் கைப்பிடிகள், செல்போன்கள் போன்ற பொருள்களை தொடும் போது கவனமாக இருக்க வேண்டும். இவற்றை பயன்படுத்திய உடனே கைகளை கட்டாயம் கழுவ வேண்டும். பொது இடங்களுக்கு செல்லும் போது மாஸ்க் அணிந்து கொள்ளலாம். நோய்க்கான அறிகுறி காணப்படுபவர்கள், தங்களை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்" என மருத்துவர் சிவகுமார் அறிவுறுத்தியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.