/indian-express-tamil/media/media_files/2025/03/31/mtcJlaae0VHt4ITbnXjm.jpg)
கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில், தற்போது பல்வேறு ஊர்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்துக் காணப்படுகிறது. இதனால் நம் உடலை குளிர்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் பராமரிக்க வேண்டியது அவசியம்.
இதற்காக தர்பூசணி போன்ற பழங்களை இந்த சீசனில் சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். இவற்றில் இருக்கும் அதிகப்படியான நீர்ச்சத்து, வெயிலின் தாக்கத்தில் இருந்து தற்காத்துக் கொள்ள உதவுகிறது.
அதே நேரத்தில் இயற்கையாக விளைவிக்கப்பட்ட பழங்களை உட்கொண்டால் மட்டுமே நமக்கு அதன் பலன் முழுமையாக கிடைக்கும். இன்றைய சூழலில் லாபம் அதிகம் சம்பாதிக்க வேண்டும் என்ற காரணத்திற்காக பழங்களில் நிறைய இரசாயனங்கள் சேர்க்கப்படுகின்றன.
இவற்றை சாப்பிடும் போது உடல் நலக் குறைவு ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சதீஷ் குமார் தெரிவித்துள்ளார். மேலும், இரசாயனங்கள் கலக்கப்பட்ட பழங்களை எவ்வாறு கண்டறிய முடியும் என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பான தகவல்களை Behindwoods யூடியூப் சேனலில் அவர் பகிர்ந்து கொண்டார்.
அந்த வகையில், இரசாயனங்களை தண்ணீரில் கலந்து அதனை ஊசி மூலமாக தர்பூசணி பழங்களுக்குள் செலுத்துவதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சதீஷ் குமார் கூறுகிறார். இவ்வாறு இரசாயனம் சேர்க்கப்பட்ட பழங்கள் விரைவாக கெட்டு விடும் என்பதால், சில பழங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து அவற்றில் இந்த இரசாயனத்தை கலந்து ஜூஸ் போடுவதாக அவர் கூறுகிறார்.
எனவே, பெரும்பாலும் கடைகளில் தர்பூசணி ஜூஸ் குடிப்பதை தவிர்க்குமாறு அவர் அறிவுறுத்துகிறார். இதேபோல், இரசாயனம் கலக்கப்பட்ட தர்பூசணி பழத்தை கண்டறியும் முறையையும் அவர் விளக்கியுள்ளார். இதற்காக ஒரு டிஷ்யூ பேப்பர் இருந்தால் போதுமானதாக இருக்கும்.
அந்த வகையில், இரசாயனம் சேர்க்கப்பட்ட தர்பூசணி பழங்கள் அனைத்தும் பார்ப்பதற்கு மிகவும் சிவந்து போய் இருக்கும். இவ்வாறு இருக்கும் பழங்களை சாப்பிடுவதற்கு முன்பாக, அதன் மீது ஒரு டிஷ்யூ பேப்பர் வைத்து மெலிதாக தேய்த்து பார்க்க வேண்டும்.
இப்படி பழத்தில் தேய்க்கும் போது, டிஷ்யூ பேப்பர் மீது ஆரஞ்சு அல்லது சிவப்பு நிறம் படிந்து இருந்தால் அதில் இரசாயனம் கலக்கப்பட்டிருக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம். எனவே, கடைகளில் இருந்து தர்பூசணி பழங்கள் வாங்கும் போது மிகக் கவனமாக இருக்க வேண்டும் என்று உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சதீஷ் குமார் அறிவுறுத்துகிறார். ஏனெனில், இவை நம் ஆரோக்கியத்தை கடுமையாக பாதிக்கும்.
நன்றி - Behindwoods O2 Youtube Channel
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.