தோசைக் கல்லில் வினிகர், பேக்கிங் சோடா போன்ற எந்த விதமான பொருட்களையும் நாம் உபயோகிக்கத் தேவையில்லை. வெறும் ஒரு டீஸ்பூன் கல் உப்பு வைத்து தோசைக் கல்லில் இருக்கும் அதிக எண்ணெய் பிசுக்கை நீக்கி புதியதாக வாங்கிய தோசை கல் போல் மாற்றி விட முடியும்.
எலுமிச்சை பழத்தில் இருக்கும் அமிலம் எண்ணெய் பிசுக்கை எளிதாக நீக்கி விடக்கூடிய தன்மை கொண்டுள்ளது. கல் உப்பு மற்றும் எலுமிச்சை பழம் அரை மூடி இருந்தாலே போதும். தோசைக் கல்லை சூப்பராக புதியது போல் செய்து விடலாம். தோசைக் கல்லில் நாளடைவில் ஓரங்களில் படியும் எண்ணெய் பிசுக்கு ஒட்டிக் கொண்டிருக்கும். தோசை சுடும் பொழுது அந்த இடத்தில் இருக்கும் மாவு சரியாக வேக முடியாமல் தோசை பிய்ந்து போய் விடும்.
தோசைக்கல்லை அடுப்பின் மேல் வைத்து அடுப்பை லோ ஃப்ளேமில் வைத்துக் கொள்ளுங்கள். லேசாக சூடேறியதும் அதில் ஒரு டீஸ்பூன் அளவு கல் உப்பு எடுத்து போட்டு கொள்ளுங்கள். அரை மூடி எலுமிச்சை பழத்தை ஸ்பூன் பயன்படுத்தி பின் பக்கமாக குத்திக் கொள்ளுங்கள். இப்போது ஸ்பூனை பிடித்து எலுமிச்சையை கல் உப்பின் மீது நன்கு தேய்க்க வேண்டும்.
இப்படி கல் லேசாக சூடாக இருக்கும் பொழுது கல் உப்பை கொண்டு தேய்க்கும் பொழுது அதில் இருக்கும் அழுக்குகள், எண்ணெய் பிசுக்கு, படர்ந்த கரி போன்றவை எளிதாக நீங்கி விடும். ஒரு 10 நிமிடத்திற்கு இதே போல் தேய்த்துக் கொண்டே இருங்கள். பின்னர் தோசை கரண்டி பயன்படுத்தி ஓரங்களில் இருக்கும் அழுக்குகளை எல்லாம் சுரண்டி எடுத்து விட வேண்டும்.
அதன் பின் மீண்டும் தோசைக்கல்லை வைத்து எண்ணெய் ஊற்றி எலுமிச்சை சாற்றை பிழிந்து இதே போல் உப்பு சேர்த்து தேய்த்து எடுக்க வேண்டும். அதற்குப் பிறகு தண்ணீரால் சுத்தம் செய்து வைத்து எண்ணெய் ஊற்றி ஒரு சுத்தமான துணியை வைத்துத் துடைத்து எடுத்தால் போதும், நீங்கள் புதியதாக வாங்கும் பொழுது எப்படி இருந்ததோ அதே போல் உங்களுடைய தோசைக்கல் மாறிவிடும்.
இப்போது இந்த தோசைக்கல்லில் ரவா தோசை, மணக்க மணக்க நெய் தோசை, மொரு மொரு தோசை என்று எதை சுட்டாலும் பெரிய அளவில் உங்கள் தோசைக்கல் எவ்வளவு அளவிற்கு இருக்கிறதோ அதே அளவிற்கு அழகாக சுட்டு எடுக்க முடியும். கொஞ்சம் கூட தோசைக் கல்லில் மாவு ஒட்டாமல் சீக்கிரம் வெந்து க்ரிஸ்பியான தோசை உங்களுக்கு கிடைக்கும்.