/indian-express-tamil/media/media_files/2025/08/06/rid-of-ants-in-your-kitchen-naturally-2025-08-06-16-26-34.jpg)
சர்க்கரை டப்பாவில் எறும்பு தொல்லையா? இந்த ஒரு பொருள் போதும்… எந்த பூச்சியும் நெருங்காது!
சமையலறையில் எறும்புகள் படையெடுக்க ஆரம்பித்தால், அது எவ்வளவு பெரிய தொல்லையாக மாறும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. ரசாயனப் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தினால், அவை உணவிலும் கலந்துவிடுமோ என்ற பயம் இருக்கும். கவலை வேண்டாம்! உங்கள் சமையலறையில் உள்ள சில எளிய பொருட்களைக் கொண்டே எறும்புகளைத் திறம்பட விரட்ட முடியும்.
எறும்புகள் தொல்லையின்றி உங்கள் சமையலறையை சுத்தமாக வைத்திருக்க எளிய வழி இருக்கிறது. அது என்னவென்றால், உங்கள் சர்க்கரை பாத்திரத்தில் 2 அல்லது 3 கிராம்புகளைப் போட்டு வைப்பதுதான். பெரும்பாலும், சர்க்கரை பாத்திரத்தில் எறும்புகள் நுழைந்துவிடுவதால், அதை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது. ஆனால், கிராம்பின் வாசனை எறும்புகளுக்குப் பிடிக்காத ஒன்று. எனவே, கிராம்புகளை சர்க்கரை பாத்திரத்தில் வைத்தால், அதன் வாசனையால் எறும்புகள் அண்டாது. இதனால், உங்கள் சர்க்கரை சுத்தமாக இருப்பதோடு, சமையலறையும் எறும்புகள் இல்லாத இடமாக இருக்கும். ரசாயனப் பொருட்கள் இல்லாமல், இயற்கையான முறையில் எறும்புகளை விரட்ட இது சிறந்த வழி. இந்த எளிய டிப்ஸ் கடைப்பிடிப்பதன் மூலம், இனி உங்கள் சர்க்கரை பாத்திரத்தை எறும்புத் தொல்லையிலிருந்து பாதுகாக்கலாம்.
எறும்புகள் பொதுவாக ஒரு தடத்தை உருவாக்கி, அதன் வழியாகவே தொடர்ந்து வரும். இந்தத் தடத்தை அழிப்பதே அவற்றின் வருகையை நிறுத்துவதற்கான சிறந்த வழி. அதற்கு, வினிகரையும் தண்ணீரையும் சம அளவில் கலந்து ஸ்பிரே பாட்டிலில் ஊற்றவும். எறும்புகள் வரும் இடங்களில் இந்த கலவையைத் தெளித்துவிட்டால், அவற்றின் மோப்பத் திறன் பாதிக்கப்பட்டு, பாதை அழிந்துவிடும். இதேபோல, எலுமிச்சை சாறையும் பயன்படுத்தலாம். எலுமிச்சைத் தோல்களை எறும்புகள் வரும் இடங்களில் வைப்பது அல்லது அதன் சாறைத் தெளிப்பது அவற்றின் வருகையைத் தடுக்கும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.