நம் எல்லோருக்குமே சப்பாத்தி, பரோட்டா, குஸ்கா போன்ற உணவுகள் பிடிக்கும். ஆனால் இவற்றை நம் வீடுகளில் செய்வது அரிது. ஏனெனில் இதற்கு தேவையான, கிரேவி அல்லது குருமா செய்வது ரொம்பக் கஷ்டம். இந்த பிரச்சனைக்கு எளிய தீர்வாக எம்ட்டி சால்னாவை பரிந்துரைக்கிறார் செஃப் வெங்கடேஷ் பட். இது செய்வதற்கு எளிதானதோடு, சுவையானதும் கூட.
இது அசைவ சால்னா கிடையாது, ஆனா அசைவம் போன்ற சுவையில் இருக்க கூடியது. இதில் இறைச்சியோ, காய்கறிகளோ கிடையாது. ஆனால் சுவையில் இதனை அடிச்சிக்க முடியாது. இது செய்வதற்கு எளிதானதோடு, சுவையானதும் கூட. வாருங்கள் இந்த எம்ட்டி சால்னா எப்படி செய்வது என்பதைப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
கடலை எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
தேங்காய் துருவல் – 1 மூடி
சோம்பு – 1 டேபிள் ஸ்பூன்
கசகசா – 1 டேபிள் ஸ்பூன்
முந்திரி பருப்பு – 50 கிராம்
பிரிஞ்ச் இலை – சிறிதளவு
இலவங்க பட்டை – சிறிதளவு
ஏலக்காய் – 4
இலவங்கம் – 4
மஞ்சள் தூள் – ½ டீஸ்பூன்
மிளகாய் தூள் – 1½ டீஸ்பூன்
தனியா தூள் – 1 டேபிள் ஸ்பூன்
கரம் மசாலா – 1 டேபிள் ஸ்பூன்
கடலை மாவு – 1½ டேபிள் ஸ்பூன்
சிக்கன் மசாலா – 1 டீஸ்பூன்
பெரிய வெங்காயம் - 2
உப்பு தேவையான அளவு
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் – 4
கறிவேப்பிலை , மல்லித்தழை – சிறிதளவு
புதினா- சிறிதளவு
தக்காளி - 2
செய்முறை
முதலில், தேங்காய் துருவலில் சோம்பு, கசகசா மற்றும் முந்திரி சேர்த்து மிக்ஸியில் போட்டு பேஸ்ட்டாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து கடலை எண்ணெயை ஊற்றி காய விடவும்.
எண்ணெய் காய்ந்த பின் அதில் பிரிஞ்ச் இலை, பட்டை, ஏலக்காய் மற்றும் இலவங்கம் சேர்க்கவும்.
இதனோடு நறுக்கிய பெரிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வரும் வரை வதக்கவும். வெங்காயம் வதக்கும்போது உப்பு சேர்த்துக் கொள்வது நல்லது.
பின்னர் இஞ்சி பூண்டு பேஸ்டை சேர்க்கவும். இஞ்சி பூண்டின் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
இதில் பச்சை மிளகாய், கறிவேப்பிலை, மல்லித்தழை மற்றும் முக்கியமாக புதினா சேர்த்து சமைக்கவும். சால்னாவிற்கு புதினா ரொம்ப முக்கியமானது.
அதன்பின் இதனோடு நறுக்கிய தக்காளியை சேர்த்து வதக்கவும்.
இதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து நன்கு சமைக்கவும்.
பின்னர் தேவையான அளவு உப்பு சேர்த்து, 250 மி.லி தண்ணீர் ஊற்றி 5 நிமிடம் கொதிக்க வைக்கவும்.
இப்போது கடலை மாவை ஒரு கிண்ணத்தில் கொட்டி சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கி தனியாக வைத்துக் கொள்ளவும்.
அரைத்த தேங்காயை அடுப்பில் வெந்துக் கொண்டிருக்கும் மசாலாவுடன் சேர்க்கவும். இதில் மேலும் சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
பின்னர் கடலை மாவு கலவையை மசாலாவுடன் சேர்த்து, அதனுடன் சிக்கன் மசாலாவை சேர்த்து, மேலும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.
இந்த மசாலாவை மிதமான சூட்டில் 20 நிமிடங்களுக்கு கொதிக்க விடவும். பின்னர் மல்லித் தழை சேர்த்து இறக்கி வைக்கவும்.
இப்போது சூடான, சுவையான சால்னா ரெடி. அப்புறம் என்ன நீங்களும் இந்த எளிய சால்னாவை வீட்டில் செய்து சாப்பிடுங்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.