மனித வாழ்வின் தொடக்கமும், இறுதியும் பாலில் தான். தாய்ப்பாலுக்கு பிறகு விலங்குகளின் பால். மாட்டுப்பால், ஆட்டுப்பால், ஒட்டகப்பால் வரை அருந்துகின்றோம்.
விதைகளை அரைத்து அதில் இருந்து பாலெடுப்பது என்று வகைப்படுத்தினால், தேங்காய் பால், பாதாம் பால், நிலக்கடலை பால், கொள்ளுப்பால், பருத்திப் பால்… என பட்டியல் உண்டு.
பருத்திப் பாலை வெறும் வயிற்றில் குடித்தால் அல்சர் மற்றும் உணவுப் பாதையில் உள்ள புண்களை ஆற்றும். டயட்டில் இருப்பவர்களுக்கு நல்லதொரு உணவு. இரத்த அழுத்தத்தை சீர்படுத்தி இதயத்திற்கு நன்மை அளிக்கிறது. நெஞ்சு சளியை விரட்டும். ஆகவே மழை, குளிர்க்காலங்களில் அடிக்கடி பருகலாம். மாதவிடாய் சுழற்சியை சீராக்கும்.
சரி பலம் தரும் பருத்திப்பால் ரெசிபி செய்வது பற்றி பார்க்கலாம்.
தேவையானப் பொருட்கள்
பச்சரிசி - 100 கிராம்
கருப்பு பருத்தி விதை - 50 கிராம்
தேங்காய் மூடி - 1
ஏலக்காய் - 3
முந்திரி - சிறிதளவு
சுக்கு - சிறிதளவு
கருப்பட்டி - 1 வட்டு (பெரியது)
செய்முறை
6 மணிநேரம் தண்ணீரில் ஊற வைத்த பருத்திவிதையை, மிக்ஸியில் அரைத்து பால் எடுக்கவும். பச்சரிசியையும் மிக்ஸியில் ரவை பதத்திற்கு பொடித்துக்கொள்ளவும். கருப்பட்டியை நன்றாக பொடித்து அதில் தண்ணீர் விட்டு கரையும் வரை காய்ச்சி வடிகட்டி வைத்துக்கொள்ள வேண்டும். தேங்காய் பாலும் எடுத்துக்கொள்ளவும்.
பாத்திரம் ஒன்றில் 6 டம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்க வைக்க வேண்டும். அதில் பொடித்து வைத்துள்ள அரிசியை போட்டு சிறிதுநேரம் வேகவிட வேண்டும். அரிசி வெந்தவுடன், குறைந்த வெப்பத்தில் அடுப்பை வைத்து, பருத்திப்பாலை ஊற்றி நன்றாக கொதிக்கவிட வேண்டும்.
பருத்திப்பால் பச்சை வாசனை போனவுடன் கருப்பட்டி பாகை சேர்த்து அதனுடன் சுக்கு, ஏலக்காய், மீதமுள்ள தேங்காய் துருவல், வறுத்த முந்திரி ஆகியவற்றை சேர்த்து கிளற வேண்டும். தேங்காய் பாலை இறுதியாக சேர்க்கத்துக் கொள்ளலாம். அதன் பிறகு கொதிக்க விட்டு எடுத்தால் சுவையான பருத்தி பால் தயார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.