சிலருக்கு வீட்டில் செய்யும் சாம்பாரை விட திருமணங்களில் பரிமாறப்படும் சாம்பார் மிகவும் பிடிக்கும். குறிப்பாக பிராமணர் வீட்டு விசேஷங்களில் வைக்கப்படும் சாம்பார் எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்.
ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சரியான உணவைத் தேர்ந்தெடுப்பது நமக்கு மிகவும் அவசியமான ஒன்றாக உள்ளது. தமிழ்-பிராமண சமூகத்தின் முக்கிய அம்சம் பாரம்பரிய ஆயுர்வேத உணவான சாத்விக் வகை உணவுகள் தான். செயற்கை பொருட்களின் எந்தவொரு பயனும் இல்லாமல் தயாரிக்கப்படும் இவ்வகையான உணவுகள் உடலை வலுப்படுத்தும்.
தமிழ்-பிராமண திருமணங்களில் கலந்து கொள்ளும் விருந்தினர்கள் வாழை இலையில் பரிமாறப்படும் உணவை ஒருபோதும் தவறவிடுவதில்லை. வாழை இலையில் வெவ்வேறு உணவு பண்டங்கள் ஒரு குறிப்பிட்ட வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டு பரிமாறப்படும் ..குறைந்த அளவில் உட்கொள்ள வேண்டிய ஊறுகாய், சிப்ஸ், அப்பளம் , இலையின் குறுகிய பக்கத்தில் வழங்கப்படுகின்றன. காய்கறி கிரேவி மற்றும் வறுத்த உணவுகள் கறி, கூட்டு, பொரியல்,பச்சடி போன்றவை இலையின் பரந்த பக்கத்தில் வழங்கப்படுகின்றன. முக்கியமாக கல்யாண சாம்பார். திருமணங்களில் பரிமாறப்படும் சாம்பார் வீட்டில் வைக்கும் வழக்கமான சாம்பாரை விட கெட்டியாகவும் காய்கறிகள் அதிகமாகவும் சேர்க்கப்பட்டிருக்கும். ஒன்றுக்கு மேற்பட்ட காய்கறிகளைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுவதால், கதம்ப சாம்பார் என்றும் அழைக்கப்படுகிறது
தற்போது சாம்பார் எப்படி செய்வது என பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
மஞ்சள் பூசணி,கத்திரிக்காய்,முருங்கைக்காய் (வெட்டியது) - 3 அல்லது 4 துண்டுகள்
புளி - எலுமிச்சை அளவு
துவரம் பருப்பு /100 கிராம்
நல்லெண்ணெய் - 1/4 ஸ்பூன்
உப்பு தேவைக்கேற்ப
தாளிப்பதற்கு
கடுகு -1/2 ஸ்பூன்
வெந்தயம் -1/2 ஸ்பூன்
சிவப்பு மிளகாய் - 2
பச்சை மிளகாய் -1
கறிவேப்பில்லை, கொத்தமல்லி தேவையான அளவு
சாம்பார் மசாலா செய்ய தேவையான பொருட்கள்
நல்லெண்ணெய் -2 ஸ்பூன்
மல்லி -2 ஸ்பூன்
கடலை பருப்பு -1 ஸ்பூன்
கருப்பு உளுந்து -1 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 6
வெந்தயம் -1/4 ஸ்பூன்
அரைத்த தேங்காய் -1 ஸ்பூன்
செய்முறை
சாம்பார் மசாலா தயாரிக்க, அடுப்பில் கடாயை வைத்து சூடானதும் 2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றவும்.
எண்ணெய் காய்ந்ததும் கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு ,காய்ந்த மிளகாய், வெந்தயம் சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும். இறுதியாக, அரைத்த தேங்காயைச் சேர்த்து சிறிது நேரம் வறுக்கவும்.பிறகு வறுத்தவற்றை ஆற வைத்து மிக்சியில் பொடியாக அரைத்து கொள்ளவும்.
புளி சாறு எடுத்து அதில் காய்கறிகள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து வேக வைக்கவும். தேவைக்கேற்ப சிறிது தண்ணீர் சேர்க்கவும். காய்கறிகள் வெந்த பின்பு வேகவைத்த துவரம் பருப்பைச் சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விடவும்.
பின்னர், சாம்பார் தூள் சேர்த்து நன்கு கலக்கி கொதிக்கவிடவும்.தேவைகேற்ப உப்பு சேர்க்கவும்.
தாளிப்பதற்கு ஒரு கரண்டி எண்ணெய் விட்டு அதில் கடுகு, வெந்தயம், கறிவேப்பில்லை ,சிவப்பு மிளகாய், பச்சை மிளகாய் மற்றும் பெருங்காயம் சேர்த்து தாளித்து சாம்பாரில் கொட்டவும். இறுதியாக கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.
மணக்க மணக்க கல்யாண சாம்பார் ரெடி..
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil