பெரும்பாலும் மதிய உணவுக்கு சாம்பார், காரக்குழம்பு என சாப்பிட்டு போர் அடித்துவிட்டதா? அப்போது பருப்பு உருண்டை குழம்பு செய்துபாருங்கள். இந்த குழம்பை சாதத்துடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும். இது தமிழ்நாட்டின் புகழ்பெற்ற காரைக்குடி வகையை சேர்ந்த டிஷ். தற்போது பருப்பு உருண்டை குழம்பு எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
பருப்பு உருண்டை செய்ய தேவையான பொருட்கள்:
கடலைப்பருப்பு – 1/2 கப்
துவரம் பருப்பு – 1/4 கப்
காய்ந்த மிளகாய் – 4
சோம்பு – அரை தேக்கரண்டி
சீரகம் – அரை தேக்கரண்டி
பெரிய வெங்காயம் – 1
கருவேப்பிலை – சிறிதளவு
சின்ன வெங்காயம் – 50 கிராம்
உப்பு தேவையான அளவு
உருண்டை குழம்பு செய்ய தேவையான பொருட்கள்:
நல்லெண்ணெய் – 3 தேக்கரண்டி
வெந்தயம் – 1/8 தேக்கரண்டி
கடுகு – 1/2 தேக்கரண்டி
கருவேப்பிலை – சிறிதளவு
சின்ன வெங்காயம் – 150 கிராம்
பூண்டு – 50 கிராம்
தக்காளி – 1
சாம்பார் தூள் – 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
உப்பு தேவையான அளவு
புளி – சிறிய எலுமிச்சை பழ அளவு
கொத்தமல்லி இலைகள் – சிறிதளவு
தேங்காய் விழுது அரைக்க தேவையான பொருட்கள்:
துருவிய தேங்காய் – 1/4 கப்
சீரகம் – 1/2 தேக்கரண்டி
முந்திரிப் பருப்பு – 5
செய்முறை
*பருப்பு உருண்டை செய்வதற்கு ஒரு பாத்திரத்தில் அரை கப் கடலைப்பருப்பு, கால் கப் துவரம்பருப்பு மற்றும் 4 காய்ந்த மிளகாய் ஆகியவற்றை சேர்த்து மூன்று மணி நேரம் ஊற வைக்கவும்.
*பிறகு அதை ஒரு மிக்ஸி ஜாரில் மாற்றி அதனுடன் அரை தேக்கரண்டி சோம்பு, அரை தேக்கரண்டி சீரகம், கருவேப்பிலை சிறிதளவு, ஆகியவற்றை சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
*பின் தேவையான அளவு உப்பு, பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்
*இட்லி தட்டில் எண்ணெய் தடவி உருண்டைகளை வைத்து 10 நிமிடங்கள் வேக வைக வைத்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
*ஒரு கடாயில் 3 தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்துக் கொள்ளவும்.
*எண்ணெய் சூடானதும் கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை சேர்க்கவும்.
*அதனுடன்150 கிராம் அளவிற்கு சின்ன வெங்காயம் மற்றும் 50 கிராம் அளவு பூண்டு சேர்த்து வதக்கி கொள்ளவும்
பின்பு தக்காளி சேர்த்து வதக்கவும்
*அனைத்தும் நன்கு வதங்கிய பின் அதனுடன் இரண்டு ஸ்பூன் குழம்பு மிளகாய்தூள், மஞ்சத்தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து கலக்கவும்.
*அதனுடன் ஒரு எலுமிச்சைப்பழ அளவு புளியை தண்ணீரில் ஊறவைத்து கரைத்து சேர்த்துக் கொள்ளவும். அதனுடன் சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.
*தயாராக வைத்துள்ள பருப்பு உருண்டைகளை சேர்த்து மூடி வைத்து கொதிக்க விடவும்.
*ஒரு மிக்ஸி ஜாரில் கால் கப் துருவிய தேங்காய், அரை தேக்கரண்டி சீரகம், மற்றும் நான்கு அல்லது ஐந்து முந்திரிப்பருப்பு ஆகியவற்றை சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
*குழம்பு கொதித்த பின் அரைத்த விழுதை சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விடவும். பின்பு கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.
சுவையான பருப்பு உருண்டை குழம்பு ரெடி...
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"