பாம்பு கடித்தால் இறுக்கி கட்டக் கூடாது… இந்த ஆபத்து இருக்கு; டாக்டர் வேணி எச்சரிக்கை
பாம்பு கடித்தால் நாம் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பது குறித்த மூளை நரம்பியல் மருத்துவர் வேணி கூறிய விரிவான ஆலோசனைகளை இந்தப் பதிவில் காணலாம்.
பாம்பு கடித்தால் நாம் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பது குறித்த மூளை நரம்பியல் மருத்துவர் வேணி கூறிய விரிவான ஆலோசனைகளை இந்தப் பதிவில் காணலாம்.
பாம்பு கடித்தால் இறுக்கி கட்டக் கூடாது… இந்த ஆபத்து இருக்கு; டாக்டர் வேணி எச்சரிக்கை
"ஐயோ, பாம்பு கடிச்சிருச்சே" என்ற அலறல் சத்தம் கேட்டதுமே நம்மில் பலருக்கு நெஞ்சு படபடக்கும். கடித்தது விஷப்பாம்பா, இல்லையா? இனி என்ன செய்வது? என்றெல்லாம் 1,000 கேள்விகள் மனதில் எழும். இதுபோன்ற இக்கட்டு சூழலில், பதற்றப்படாமல் சரியான முதலுதவி செய்வதும், உடனடியாக மருத்துவ உதவியை நாடுவதும்தான் உயிரைக் காக்கும் முதல்படி என்கிறார் மூளை நரம்பியல் மருத்துவர் வேணி. பாம்பு கடித்தால் நாம் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பது குறித்த அவரது விரிவான ஆலோசனைகளை இந்தப் பதிவில் காணலாம்.
Advertisment
பாம்பு கடித்த இடத்தில் ஏற்படும் வீக்கம், வலியின் தீவிரம் ஆகியவற்றைக் கொண்டு விஷத்தின் தன்மையை கணிக்க முடியும். கடித்த இடத்தில் மட்டும் லேசான வீக்கம், பாம்பின் பல் பதிந்த தடம் (பைட் மார்க்ஸ்) இருப்பது போன்றவை குறைந்தபட்ச விஷத்தன்மையைக் குறிக்கும். காலில் பாதத்தில் கடித்திருந்தால், வீக்கம் கணுக்காலைத் தாண்டி முழங்கால் வரை பரவினால், அது லேசான பாதிப்பு. வீக்கம் முழங்காலையும் தாண்டி முழு கால் பகுதியும் வீங்கினால், அது மிதமான பாதிப்பாகக் கருதப்படுகிறது. ரத்தம் உறையும் தன்மையில் பாதிப்பு, ரத்த அழுத்தம் குறைதல், உடல் முழுவதும் அதிகமாக வியர்த்துக் கொட்டுதல் போன்ற தீவிர அறிகுறிகள் என்கிறார் மருத்துவர் வேணி.
இவை தவிர, பாதிக்கப்பட்டவருக்கு பயம், பதற்றம் காரணமாக அதிகமாக வியர்ப்பது, வாந்தி வருவது, மூச்சுத்திணறல் ஏற்படுவது போன்றவை பொதுவான அறிகுறிகளாகும். நாகப்பாம்பு போன்ற நியூரோடாக்சிக் விஷமுள்ள பாம்புகள் கடித்தால், தொண்டை அடைத்துக் கொள்வது, கை, கால்களை அசைக்க முடியாமல் போவது, பக்கவாதம் போன்ற அறிகுறிகள் ஏற்படும். அதேசமயம், கட்டுவிரியன், கண்ணாடி விரியன், சுருட்டை பாம்பு போன்ற ஹீமோடாக்சிக் விஷமுள்ள பாம்புகள் கடித்தால், கடித்த இடத்திலிருந்து அதிக ரத்தப்போக்கு ஏற்படலாம். பாம்புக்கடித்ததும் பதட்டத்தில் நாம் செய்யும் சில தவறான முதலுதவிகள், நிலைமையை மேலும் மோசமாக்கிவிடும் என்கிறார் மருத்துவர் வேணி. குறிப்பிடும்
தவிர்க்க வேண்டிய முக்கிய விஷயங்கள்:
Advertisment
Advertisements
கயிறு இறுக்கிக் கட்டுவது: கடித்த இடத்திற்கு மேலே கயிறு கொண்டு இருக்கமாக கட்டுவது முற்றிலும் தவறு. இதனால், ரத்த ஓட்டம் தடைபட்டு, விஷம் ஓரிடத்திலேயே தங்கி, அந்தப் பகுதியில் கடுமையான அழுத்தம் அதிகரித்து, கால் அழுகிப் போகும் அபாயம் கூட ஏற்படலாம்.
காயத்தைக் கீறுவது, விஷத்தை உறிஞ்சுவது: கடித்த இடத்தைக் கீறி ரத்தத்தை வெளியேற்றுவது அல்லது வாயால் உறிஞ்சி விஷத்தை எடுக்க முயற்சிப்பது போன்ற செயல்களால் எந்தப் பயனும் இல்லை, மாறாக கிருமித் தொற்று ஏற்படவே வாய்ப்புள்ளது என்று எச்சரிக்கிறார் மருத்துவர் வேணி.
சரியான முதலுதவி உயிர்காக்கும். மருத்துவர் பரிந்துரைக்கும் முக்கிய முதலுதவி முறைகள்:
அசைவற்ற நிலை: கடித்த கை அல்லது காலை அசைக்காமல் வைத்திருக்க வேண்டும். பாதிக்கப்பட்டவரை நடக்க வைத்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லக்கூடாது.
சரியான நிலையில் படுக்க வைத்தல்: ஆம்புலன்ஸிலோ அல்லது வாகனத்திலோ அழைத்துச் செல்லும்போது, கடித்த காலை மட்டமாக வைத்திருக்க வேண்டும். தலையணைகள் வைத்து காலை உயர்த்துவதால், விஷம் வேகமாக உடலுக்குள் பரவும் அபாயம் உள்ளது. தலையை மட்டும் சற்று உயரமாக வைத்திருக்கலாம்.
உடனடி மருத்துவ உதவி: எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது மிக மிக அவசியம். பாம்பைத் தேடி அடிப்பதில் நேரத்தை வீணாக்க வேண்டாம்.
தைரியமூட்டுதல்: பாதிக்கப்பட்டவருக்கு மனதைரியம் கொடுப்பது மிகவும் முக்கியம். "இது விஷப்பாம்பாக இருக்காது, பயப்படாதீர்கள்" என்று கூறி, அவர்களுக்கு உணர்வுபூர்வமான ஆதரவை அளிக்க வேண்டும். அனைவரும் சேர்ந்து பதற்றப்பட்டால், பாதிக்கப்பட்டவரின் நிலை மோசமடையக்கூடும்.
சுவாசம் மற்றும் தண்ணீர்: பாதிக்கப்பட்டவர் நல்ல காற்றோட்டமான இடத்தில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மருத்துவமனைக்குச் செல்லும் வரை கொஞ்சம் கொஞ்சமாகத் தண்ணீர் குடிக்கக் கொடுக்கலாம். இது ரத்த அழுத்தம் குறைவதைத் தடுக்க உதவும்.
மருத்துவமனைக்கு வந்தவுடன், மருத்துவர்கள் முழு ரத்த உறைதல் நேரப் பரிசோதனை (Whole Blood Clotting Time) போன்ற சில பரிசோதனைகளை மேற்கொண்டு, விஷத்தின் தன்மையையும், பாதிப்பின் அளவையும் கண்டறிவார்கள்.
பாம்பு விஷமுறிவு மருந்து (Anti-Snake Venom - ASV): எல்லா பாம்புக்கடிக்கும் இந்த மருந்து தேவைப்படாது. கடித்தது விஷப்பாம்புதானா, விஷம் உடலில் பரவியுள்ளதா என்பதை உறுதி செய்த பின்னரே இந்த மருந்து செலுத்தப்படும்.
பிற சிகிச்சைகள்: ரத்த அழுத்தம் குறைவாக இருந்தால், அதைச் சரிசெய்ய திரவங்கள் (ஃபுளூயிட்ஸ்) ஏற்றப்படும். வலி அதிகமாக இருந்தால், மருத்துவரின் ஆலோசனையின் பேரில் வலி நிவாரணிகள் வழங்கப்படும்.