இந்தியாவின் மிக பிரபலமான ஆடை வடிவமைப்பாளர் சப்யசாச்சி முகர்ஜி. இவர் அண்மையில் இந்திய இளம்பெண்கள் சேலை அணிவதில்லை எனவும், மேற்கத்திய உடைகள் அணியவே ஆர்வம் காட்டுவதாகவும் தெரிவித்துள்ளார்.
ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இந்திய மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய சப்யசாச்சி முகர்ஜி, “எனக்கு சேலை அணிய தெரியாது என நீங்கள் என்னிடம் சொன்னால், அதுகுறித்து நீங்கள் அவமானப்பட வேண்டும். இது உங்களின் கலாச்சாரம். அதனை நீங்கள்தான் நிலைநிறுத்த வேண்டும்”, என தெரிவித்தார். இந்த கருத்தை அங்கிருந்தவர்கள் பலரும் கைதட்டி வரவேற்றனர்.
சேலை கட்டுவதில் பெண்களுக்கு ஏற்படக்கூடிய சிரமங்கள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் இவ்வாறு பேசினார்.
மேலும், பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் தான் செல்லும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் சேலை அணிந்துகொண்டுதான் செல்வார் என கூறினார்.
”சேலை அணிவது மிகவும் சுலபம். சேலை அணிந்துகொண்டு போரில் பெண்கள் சட்டையிட்டுள்ளனர். நமது பாட்டிகள் சேலை அணிந்துகொண்டே தூங்கியிருக்கின்றனர். காலையில் மடிப்பு கலையாமல் எழுந்துள்ளனர்”, என சப்யசாச்சி தெரிவித்தார்.
மேலும், ஆண்களிடையே வேட்டி கட்டும் வழக்கமும் ஒழிந்துவிட்டதாக சப்யசாச்சி தெரிவித்தார்.