மாறி வரும் அவசர உலகில், பணம் மற்றும் வெற்றிக்காக தொடர்ந்து உழைப்பவர்கள், ஓய்விற்காக படுக்கை அறை செல்லும் போது உறக்கம் வருவதில்லை.
மனதை, 'ரிலாக்ஸ்' செய்யாமலும், தொடர்ந்து மன இறுக்கத்தோடு துாங்க செல்வதுமே, துாக்கமின்மைக்கு காரணம். இரவு, 10:00 மணிக்கு துாங்கி, காலை, 6:00 மணிக்கு எழுந்திருப்பது என, அவர் அவர் தேவைக்கு ஏற்ப, தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் துாங்கி எழ வேண்டியது அவசியம். இதை, 'ஸ்லீப் ஹைஜீன்' எனும், துாக்க சுகாதாரம் என அழைப்பர்.
உடலுக்கு, எப்படி சுற்றுப்புற சுகாதாரம் அவசியமோ, அதை போன்று தான் உறக்கத்திற்கும். எனவே, துாக்க சுகாதாரத்தை கடைப்பிடிக்க முயற்சிப்பது அவசியம். படுக்கை அறையின் வெளிச்சம், வெப்பம், சுத்தம் போன்றவற்றை, உங்களின் விருப்பத்திற்கு ஏற்ப அமையுங்கள்.
மாலை 5:00 மணிக்கு மேல், டீ, காபி, சிகரெட் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. துாங்குவதற்கு, இரண்டு மணி நேரம் முன்பே, இரவு உணவை உண்ணுங்கள். ஏனெனில், உணவு உண்டதும் துாங்குவது தவறு. காலையில் நடைப்பயிற்சி செய்வதும், மாலையில் இரவு உணவிற்கு முன், குளித்து, சுத்தமாக இருப்பதன் மூலமும், துாக்கம் நன்றாக வரும். துாங்குவதற்கு முன், வாழைப்பழம், இளஞ்சூடான பால் சாப்பிடு வதை பழக்கமாக்கலாம். துாங்குவதற்கு முன், அலுவலக வேலை செய்வதும், அதை பற்றியே சிந்திப்பதும், ஒரு வித மனஇறுக்கத்தை ஏற்படுத்தும்.
அச்சமயத்தில், நமக்கு பிடித்த மியூசிக், புத்தகம், 'டிவி' போன்றவற்றால் மனதை, 'ரிலாக்ஸ்' செய்யலாம். குடும்ப உறுப்பினர்களுடன், மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட்ட பின், துாங்க செல்வது நல்ல பலன் தரும். இத்தகைய எளிய முறைகளை பின் பற்றினாலே, துாக்கமின்மை பிரச்னையை எளிதில் துரத்தி, இரவு நேரங்களில் நன்கு துாங்கலாம்.