66 ஆண்டுகளாக நகம் வளர்த்து கின்னஸ் சாதனையில் இடம் பெற்ற இந்தியர் தன்னுடைய நகங்களை முதன் முறையாக வெட்டி தள்ளினார்.
Advertisment
புனே நகரைச் சேர்ந்தவர் ஸ்ரீதர் சில்லால் என்பவர் 1952ம் ஆண்டிலிருந்து தனது இடது கையின் அனைத்து விரல்களிலும் நகங்களை நறுக்காமல் வளர்த்து வந்தார். இந்த நகங்கள் ஒன்பது மீட்டரையும் தாண்டியதால் கின்னஸ் புத்தகத்திலும் இடம்பெற்றார்.ஐந்து விரல்களிலும் வளர்ச்சி அடைந்துள்ள நகங்களின் ஒட்டுமொத்த வளர்ச்சி தற்போது 909.6 செண்டிமீட்டர்களாக உள்ளது. இதில் அவரது இடது கை கட்டை விரலில் உள்ள நகத்தின் வளர்ச்சி மட்டும் 197.8 செண்டிமீட்டர் ஆகும்.
உலகிலேயே ஒரு கையில் மிக நீளமான நகத்தை கொண்டவர் என்ற முறையில் கடந்த 2016-ம் ஆண்டு கின்னஸ் சாதனை புத்தகத்தில் ஸ்ரீதர் சில்லால் இடம்பிடித்தார்.இந்நிலையில்,தான் ஆசையாசையாய் வளர்த்த நகங்களை 66 ஆண்டுகளுக்கு பிறகு முதல்முறையாக ஸ்ரீதர் அமெரிக்காவில் நேற்று தனது கை நகங்களை வெட்டினார்.
அமெரிக்காவின் பிரபலமான ‘ரிப்லி’ஸ் பிலிவ் இட் ஆர் நாட்’ ( Ripley's Believe It or Not!) என்னும் தொலைக்காட்சி தொடர் உலகில் அதிசயமான செயல்கள் மற்றும் சாதனைகள் புரிந்தவர்களின் பதிவுகளை ஒளிபரப்பி வருகிறது ’நம்பினால் நம்புங்கள்’ என்னும் பொருள்படும் இந்த தொடருக்கான நிகழ்ச்சிகளை தயாரிக்கும் அலுவலகம் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள டைம்ஸ் சதுக்கத்தில் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்தில் ஆச்சரியப்பட வைக்கும் அரியப் பொருட்களை சேமித்து வைக்கும் அருங்காட்சியகமும் உண்டு.
ஆசையாசையாக கடந்த 66 ஆண்டுகளாக பேணிப் பராமரித்து, பாதுகாத்து வளர்த்த நகத்தை இந்த அருங்காட்சியகத்தில் நிரந்தரமாக வைத்து அழகுபார்க்க விரும்பிய ஸ்ரீதர், சமீபத்தில் இதற்கான அனுமதியை ‘ரிப்லி’ஸ் பிலிவ் இட் ஆர் நாட்’ நிகழ்ச்சி தயாரிப்பாளர்களிடம் பெற்றார்.
அவர்கள் அதற்கு சம்மதம் தெரிவித்தனர். எனவே, ஸ்ரீதர் செய்தியாளர்கள் முன்னிலையில் அவரின் நகங்கள் வெட்டினார்.