தமிழக சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் சார்பில் பொங்கல் பண்டிகையையொட்டி ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதத்தில் சர்வதேச பலூன் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், 10-வது ஆண்டாக தொடரும் இந்த திருவிழா சென்னை, மதுரை, பொள்ளாச்சி ஆகிய இடங்களில் நடத்தப்படுகிறது. அதன்படி, சென்னையை அடுத்த கோவளம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள திருவிடந்தையில் ஜனவரி 10 முதல் 12-ந் தேதி வரையிலும், பொள்ளாச்சி ஆச்சிபட்டியில் ஜனவரி 14 முதல் 16-ந் தேதி வரையிலும், மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் கீழக்கரையில் உள்ள கலைஞர் நூற்றாண்டு ஜல்லிக்கட்டு அரங்கில், ஜனவரி 18, 19 ஆகிய தேதிகளிலும் சர்வதேச பலூன் திருவிழா நடைபெறவுள்ளது.
இது குறித்து சுற்றுலா துறை அதிகாரி கூறும்போது, "இந்த சர்வதேச பலூன் திருவிழா மதுரை மாவட்டத்தில் முதன் முறையாக நடைபெறவுள்ளது. இங்கிலாந்து, பிரான்ஸ், ஆஸ்திரியா, பிரேசில், பெல்ஜியம், ஜப்பான், தாய்லாந்து, வியட்நாம் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் இதில் பங்கேற்கவுள்ளனர். மிக்கி மவுஸ், டைனோசர் உள்பட பல்வேறு வடிவங்களிலும், தனித்துவமான வண்ணங்களிலும் பலூன்கள் பறக்க விடப்படுகிறது" எனத் தெரிவித்தார்.