இரும்பு தோசைக்கல்லில் தோசை சுடுவது என்பது ஒரு கலை. சரியாகப் பராமரித்தால், இரும்பு தோசைக்கல் தரும் சுவை வேறு எந்தக் கல்லிலும் கிடைக்காது. இன்று நாம் வீட்டில் பயன்படுத்தும் இரும்பு தோசைக்கல்லை எப்படிப் பராமரிப்பது, அதில் தோசையை ஒட்டாமல் சுடுவது எப்படி என்று பார்க்கலாம்.
புதிய இரும்பு தோசைக்கல்லைப் பயன்படுத்துவதற்கு முன்பு, அதை 'சீசனிங்' செய்வது மிகவும் முக்கியம். நாம் தோசை அல்லது சப்பாத்தி சுட சுட, கல்லின் மேல் ஒரு கருப்பு நிறப் படலம் உருவாகும். இது எண்ணெயின் பூச்சு (Oil Coating) ஆகும். இந்தப் பூச்சு தான் தோசையை கல்லில் ஒட்டாமல் எடுக்க உதவுகிறது. சில சமயங்களில், தோசைக்கல்லின் மேல் உள்ள இந்த எண்ணெய் படலம் நீங்கும் போது தோசை ஒட்ட ஆரம்பிக்கும்.
குறிப்பாக சப்பாத்தி சுடும் கல்லில் தோசை சுடும்போது தோசை சரியாக வராததற்கு ஒரு காரணம் உண்டு. சப்பாத்திக்கு அதிக நேரம் சூடு தேவைப்படுவதால், கல்லின் மேற்பரப்பில் உள்ள எண்ணெய் பூச்சு நீங்கி, கல் வெள்ளையாக மாறிவிடும். இது தோசை ஒட்டுவதற்கு ஒரு முக்கிய காரணம்.
தோசை சுடும் முன் ஒரு மேஜிக்
தோசை சுடுவதற்கு முன், உங்கள் இரும்பு தோசைக்கல்லைத் தயார்ப்படுத்துவது அவசியம். இங்கே ஒரு எளிய முறை:
அடுப்பை ஆன் செய்து, தோசைக்கல்லை நன்கு சூடாக்குங்கள். கல் நன்கு சூடானதும், ஒரு கரண்டி நல்லெண்ணெய் விட்டு, அதனுடன் சிறிதளவு தண்ணீர் தெளிக்க வேண்டும். இந்த நல்லெண்ணெய் மற்றும் தண்ணீர் கலவையை கல் முழுவதும் பரப்ப வேண்டும்.
கல் சூடாக இருக்கும்போதே, நான்கைந்து முறை இப்படி நல்லெண்ணெய் மற்றும் தண்ணீர் சேர்த்து கல் முழுவதும் தடவுங்கள். பிறகு அடுப்பை பாதியாகக் குறைத்து, இந்த எண்ணெய் மற்றும் தண்ணீர் கலவையை கல் முழுவதும் நன்கு பரவுமாறு துடைத்து விடுங்கள்.
தோசை மாவை ஊற்றியவுடன் இரண்டு வினாடிகள் அப்படியே விட வேண்டும். இது கல்லின் வெப்பத்தைக் குறைத்து, மாவை எளிதாகப் பரப்ப உதவும். பின்னர் மாவைச் சுற்றிப் பரப்பினால் தோசை அருமையாக வரும்.
/indian-express-tamil/media/media_files/2024/10/21/Y9JNePYwDAkWV5PK5tUe.jpg)
சரியான வெப்பநிலையில் தோசை சுடுவது எப்படி?
தோசை எப்போதும் பாதி ஃபிளேமில் தான் வேக வேண்டும். அதிகமான சூடு வேண்டாம், அதே சமயம் மிகக் குறைந்த சூடும் இருக்கக் கூடாது.
தோசை ஊற்றியவுடன் மூடி போட்டு வேகவிடுவது, தோசை சீக்கிரம் வேகவும், எல்லா பக்கமும் சமமாக வேகவும் உதவும். மூடி போட்டு நான்கு வினாடிகளுக்குப் பிறகு, மூடியைத் திறந்து அரை கரண்டி எண்ணெய் விட்டு, மீண்டும் மூடி போட்டு வேகவிடுங்கள்.
ஒரு நிமிடம் கழித்து மூடியைத் திறந்தால், தோசை அழகாகக் கறிபோட்டு எடுக்க வரும். பிறகு தோசையைத் திருப்பி போட்டு மீண்டும் மூடி போட்டு வேகவிடுங்கள். இரண்டு நிமிடங்களுக்குப் பிறகு மூடியைத் திறந்து பார்த்தால், சூப்பரான தோசை தயார்!
தோசை சுட்ட பிறகு செய்ய வேண்டியவை
தோசை சுட்டு முடிந்ததும், அடுப்பை அணைத்துவிட்டு, சூடான கல்லின் மேல் அரை ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு, கல் முழுவதும் பரப்பி விடவும். இப்படிச் செய்வதால், அடுத்த முறை தோசை சுடும் போது, கல்லை கழுவி தோசை வார்த்தாலும், தோசை ஒட்டாமல் அருமையாக வரும்.
இந்த எளிய குறிப்புகளைப் பின்பற்றி, உங்கள் இரும்பு தோசைக்கல்லில் சூப்பரான, சுவையான தோசைகளை சுடலாம். இது சுவைக்கு மட்டுமல்ல, ஆரோக்கியத்திற்கும் நல்லது!