"உணவே மருந்து" எனும் பழமொழி உண்டு. ஆனால் அந்த உணவை சாப்பிட்ட பிறகு உங்கள் அல்லது உங்கள் குடும்ப உறுப்பினர் யாருக்காவது ரத்த சர்க்கரை அளவு ஒவ்வொரு முறையும் 200 mg/dL என்ற அளவைத் தொட்டால், சாதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டாம். ஏன் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என்பது குறித்து இங்கே விரிவாகக் காணலாம்.
பெங்களூரு, ஆஸ்டர் ஒயிட்ஃபீல்ட் மருத்துவமனையின் உட்சுரப்பியல் மற்றும் நீரிழிவு மருத்துவத் துறையின் முன்னணி ஆலோசகரான டாக்டர் நரேந்திரா இதுகுறித்து கூறியதாவது: "உணவு சாப்பிட்ட பிறகு ரத்தத்தில் சர்க்கரையின் அளவு 200 mg/dL-க்கு மேல் இருப்பது இயல்பானதல்ல. பொதுவாக, சாப்பிட்ட 2 மணி நேரத்திற்குள் சர்க்கரை அளவு 180 mg/dL-க்கும் குறைவாகவே இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் அதிகமாக இருப்பது, ரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவு சரியாகக் கட்டுப்படுத்தப்படவில்லை என்பதையே காட்டுகிறது. இது இறுதியில் நீரிழிவு நோய் வளர்ச்சிக்கு வழிவகுக்கும்" என்று அவர் எச்சரித்தார்.
இதுகுறித்து மேலும் பேசிய டாக்டர் நரேந்திரா, "ஒருவர் உணவு உண்ட 2 மணி நேரத்திற்குப் பிறகு, அவரது ரத்த சர்க்கரை அளவு 140mg/dl-க்கும் குறைவாக இருப்பது விரும்பத்தக்கது. ஏற்கனவே நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, அமெரிக்க நீரிழிவு சங்கம் இந்த அளவை 180mg/dl-க்குக் கீழ் வைத்திருக்கப் பரிந்துரைக்கிறது," என்று குறிப்பிட்டார்.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க
இந்தக் கருத்தை ஆதரித்த ஆயுர்வேத ஊட்டச்சத்து நிபுணரான இஷா லால், "உணவுக்குப் பிந்தைய சிறந்த குளுக்கோஸ் அளவு 130mg/dl முதல் 140mg/dl வரை இருக்கலாம். ஒவ்வொரு உணவுக்குப் பிறகும் உங்கள் ரத்த சர்க்கரை அளவு 140mg/dl-ஐத் தாண்டினால், நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலையான 'ப்ரீ-டயாபெட்டீஸ்' (pre-diabetes) என்பதற்கான தெளிவான அறிகுறியாகும்," என்று கூறினார். "நாம் உண்ணும் உணவில் உள்ள மாவுச் சத்து (கார்போஹைட்ரேட்) செரிமானம் அடைந்து, உடலால் உறிஞ்சப்பட்டு, குளுக்கோஸாக மாற்றப்படுவதால், பொதுவாக சாப்பிட்ட பிறகு ரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கிறது," என்றும் டாக்டர் நரேந்திரா விளக்கினார்.
ரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பதற்கான காரணத்தை விளக்கிய டாக்டர் நரேந்திரா, "நாம் உண்ணும் உணவில் எளிய வகை சர்க்கரைகள் (simple sugars) (அ) மாவுச்சத்துக்கள் (refined carbs) அதிக அளவில் இருந்தால், அவை மிக வேகமாக ரத்தத்தில் கலந்துவிடுவதால், இந்த சர்க்கரை அளவின் உயர்வு இன்னும் தீவிரமாகக் காணப்படும்," என்று indianexpress.com-க்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
ஊட்டச்சத்து நிபுணர் இஷா லால் கூறும்போது, "உடல் உழைப்பற்ற வாழ்க்கை முறை (sedentary lifestyle), தொடர்ச்சியான மன அழுத்தம் அல்லது உடல் ரீதியான அழுத்தம் ஆகியவை உடலில் 'கார்டிசோல்' (cortisol) மன அழுத்த ஹார்மோனை வெளியிட்டு, ரத்த சர்க்கரை அளவை உயர்த்துகின்றன," என்று விளக்கினார்.
சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவது எப்படி?
ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த சில எளிய வழிமுறைகளை நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளான பழங்கள், காய்கறிகள், முழுத் தானியங்கள் மற்றும் தோல் நீக்கப்பட்ட கோழி இறைச்சி போன்ற கொழுப்புக் குறைவான புரதங்களை (lean proteins) உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று டாக்டர் நரேந்திரா பரிந்துரைத்தார். மீன், அவகேடோ, நட்ஸ் போன்ற ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்த உணவுகளையும் சேர்த்துக்கொள்வது சர்க்கரை அளவை சீராக வைத்திருக்க உதவும். இந்த ஊட்டச் சத்துக்கள், சர்க்கரையை உடல் உறிஞ்சும் வேகத்தைக் குறைக்கின்றன என்றார்.
மேலும், சீரான உடற்பயிற்சி மற்றும் portion control ஆகியவை ரத்தத்தில் குளுக்கோஸின் அளவை நிலையாகப் பராமரிக்க உதவும். இதன் மூலம், சர்க்கரை அளவு மிக அதிகமாக உயரும் 'ஹைப்பர்கிளைசீமியா' (hyperglycemia) அல்லது மிகக் குறைவாகக் குறையும் 'ஹைப்போகிளைசீமியா' (hypoglycemia) போன்ற பாதிப்புகளைத் தவிர்க்கலாம்," என்று அவர் கூறினார்.
ஒவ்வொரு வேளை உணவுக்குப் பிறகும் 100 அடிகள் நடப்பது, ரத்த சர்க்கரை அளவை சீராக்க உதவும் என்று இஷா லால் கூறினார். மேலும், பாகற்காய், வேப்பிலை மற்றும் சுரைக்காய் போன்ற கசப்புச் சுவையுள்ள உணவுகளை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும் என்றும், இது ஒட்டுமொத்த உடல் நலத்திற்கும் சிறந்த வழி என்றும் அவர் குறிப்பிட்டார்.