21 ஆண்டுகள் பழமையான கோவை - மயிலாடுதுறை வரை செல்லும் ஜன் சதாப்தி விரைவு ரயில் புதுப்பொலிவுடன் அதிக வசதிகள் கொண்டு இன்று முதல் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இதனை கேக் வெட்டி பயணிகள் கொண்டாடினர்.
ஜன் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில், இந்திய இரயில்வேயில் இருந்து பிரபலமான, சிக்கனமான மற்றும் அதிவிரைவு ரயில் சேவையாகும். "ஜனா" என்ற சொல் பொது மக்களைக் குறிக்கிறது, முழுமையாக முன்பதிவு செய்யப்பட்ட இந்த ரயிலில் இரண்டு வகுப்புகளில் இருக்கைகள் உள்ளன. குளிரூட்டப்பட்ட அமரும் இருக்கைகள் மற்றும் இரண்டாம் வகுப்பு இருக்கை உள்ளன.
இந்த ஜன் சதாப்தி விரைவு ரயிலானது தமிழகத்திற்குள் இயக்கப்படும் ஒரே ரயிலாகும். கடந்த 2003 அன்று தொடங்கிய இந்த ரயில் சேவையானது, 18 முதல் 20 ரயில் பெட்டிகள் கொண்டு உள்ளது. இதில் சுமார் 2000 பயணிகள் முன்பதிவு மட்டும் செய்து பயணிக்கின்றனர்.
ந்த ரயில் சேவை தொடங்கப்பட்டதில் இருந்து 2 கோடிக்கும் அதிகமான பயணிகள் பயணம் செய்து உள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்து உள்ளது. இந்த ரயில் 360 கி.மீ. தூரம் ஈரோடு, திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை போன்று 10 ரயில் நிலையங்களில் நின்று சென்று சுமார் 6.30 மணி நேரத்தில் செல்கிறது.
கோவையில் காலை 7.15 மணிக்கு புறப்படும் இந்த ரயில் பிற்பகல் ஒரு மணிக்கு மயிலாடுதுறை சென்றடைகிறது. மீண்டும் மயிலாடுதுறையில் இருந்து 3.10 மணி புறப்பட்டு இரவு 9.30 மணிக்கு கோவை ரயில் நிலையம் வந்தடைகிறது.
இந்த ரயில் கும்பகோணம், நாகூர் மற்றும் வெள்ளாங்கண்ணியில் உள்ள கோவில்களுக்கு கோவை மாவட்டம் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து வரும் பயணிகளுக்கு குறுகிய காலத்தில் வசதியான பயண அனுபவத்தை இந்த ரயில் சேவை வழங்குகிறது.
மேலும் டெல்டா மாவட்டங்களில் உள்ள பொதுமக்கள் மேற்குத் தமிழகப் பகுதியில் உள்ள நகரங்களுக்குச் செல்ல வசதி ஏற்படுத்த வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த ரயில் பயணிகளின் வசதிக்காக தற்பொழுது அதன் திறனையும் மேம்படுத்தும் வகையில் இந்த ரயில் லிங்க் ஹாஃப்மேன் புஷ் (LHB) பெட்டிகளுடன் மேம்படுத்தப்பட்டு உள்ளது. LHB பெட்டிகள் அதிக விசாலமானவை, சிறந்த வசதிகளை செய்து உள்ளனர். மேலும் அதிக வேகத்திற்காக வடிவமைக்கப்பட்டு உள்ளது இதன் சிறப்பாகும்.
கடந்த 21 ஆண்டுகள் பழமையான இந்த கோயம்புத்தூர் ஜன் சதாப்தி விரைவு ரயில் புது பொலிவுடன் இன்று முதல் இயக்கப்படுவதை ஒட்டி அதில் தொடர்ந்து பயணிக்கும் பயணிகள் கோவை ரயில் நிலையத்தில் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தனர்.
பி.ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“