Jasmine plant care growing fertilizer blooming tips
நம்முடைய தோட்டத்தில் மல்லிகை செடி வளர்ப்பது என்பது ஒரு தனி அனுபவம். ஆனால், சில சமயங்களில், செடிகள் செழித்து வளர்ந்தாலும் பூக்கள் பூக்காமல் போகலாம். மல்லிகைச் செடிக்கு சூரிய ஒளி மிக மிக அவசியம். ஒரு நாளில் குறைந்தது 6 முதல் 8 மணி நேரம் நேரடியாகச் சூரிய ஒளி படும் இடத்தில் வைத்தால்தான் செடி நன்கு செழித்து வளரும். சூரிய ஒளி இல்லாத இடத்தில் வைத்தால், இலைகள் வெளிறிப் போய், பூக்களும் பூக்காமல் போய்விடும்.
மல்லிகைச் செடிக்கு நீங்கள் கொடுக்கும் உரங்கள்தான் அதன் பூக்கும் திறனை அதிகரிக்கச் செய்யும். இரசாயன உரங்கள் இல்லாமல், இயற்கை உரங்களைக் கொண்டே செடியைப் பூக்க வைக்கலாம்.
Advertisment
இதோ, மல்லிகைச் செடிக்கு உகந்த 5 சிறந்த இயற்கை உரங்கள்:
1. படிகாரம்
Advertisment
Advertisements
மல்லிகை மற்றும் ரோஜா போன்ற செடிகளுக்கு அமிலத்தன்மை சற்று அதிகமாக இருக்கும் மண் மிகவும் பிடிக்கும். படிகாரம் அமிலத்தன்மையை அதிகரிக்க உதவுகிறது. பூக்கள் பூக்கும் சீசன் தொடங்குவதற்கு முன்பு, மண்ணை லேசாக கிளறிவிட்டு, மிகக் குறைந்த அளவில் படிகாரத்தைப் போட்டு விடுங்கள். இது செடிகளுக்கு மிகவும் நல்லது. படிகாரம் கடைகளில் மிகவும் குறைந்த விலையில் கிடைக்கும்.
2. பஞ்சகாவ்யா
உங்களிடம் பஞ்சகாவ்யா இருந்தால், அதை நீருடன் கலந்து தெளிக்கலாம். ஒருவேளை பஞ்சகாவ்யா வாங்க முடியவில்லை என்றால், கவலை வேண்டாம். அதற்கு மாற்றாக, மாட்டுச் சாணம், நாட்டுச் சர்க்கரை அல்லது வெல்லம் ஆகியவற்றை தண்ணீரில் கலந்து ஒரு நாள் முழுக்க புளிக்க வைத்து பயன்படுத்தலாம். ஒரு சிறிய குவளை அளவுக்கு இந்த கலவையை எடுத்து, பத்து லிட்டர் தண்ணீருடன் கலந்து செடியின் இலைகள் மற்றும் மண் பகுதியில் ஊற்றலாம்.
3. அரப்பு மோர் கரைசல்
அரப்பு மோர் பவுடர் கடைகளில் கிடைக்கிறது. ஒரு கைப்பிடி அரப்பு மோர் பவுடரை, ஒரு குவளை மோருடன் கலந்து ஒருநாள் முழுக்க புளிக்க வைக்கவும். அடுத்த நாள், அதை பத்து லிட்டர் தண்ணீருடன் கலந்து செடிகளுக்குத் தெளிக்கலாம். இது செடிகளுக்கு நல்ல ஊட்டத்தைக் கொடுக்கும்.
4. பழக்கரைசல் (மீன் அமிலத்துக்கு மாற்று):
மீன் அமிலம் பயன்படுத்த விரும்பாதவர்கள், இந்த எளிய பழக்கரைசலைப் பயன்படுத்தலாம். நன்கு கனிந்த வாழைப்பழம் (நான்கு), நாட்டுச் சர்க்கரை, மற்றும் ஒரு கைப்பிடி முருங்கைக் கீரை ஆகியவற்றை ஒரு பிளாஸ்டிக் வாளி அல்லது மண் பாத்திரத்தில் போட்டு மூன்று வாரங்கள் புளிக்க வைக்க வேண்டும். பிறகு, அதை தண்ணீருடன் கலந்து இலைகள் வழியாகவும் மண் வழியாகவும் செடிகளுக்குக் கொடுக்கலாம். இது மிகவும் சிறந்த பலனைத் தரும்.
5. கடற்பாசி உரம்:
இது திரவ வடிவிலோ, துகள்களாகவோ, அல்லது பொடியாகவோ கடைகளில் கிடைக்கும். கடற்பாசி உரம் செடிகளுக்கு தேவையான நுண்ணூட்டச்சத்துக்களை வழங்கி, செழித்து வளர உதவுகிறது.
இந்த ஐந்து உரங்களில் ஏதேனும் ஒன்றைப் பத்து நாட்களுக்கு ஒருமுறை மாற்றி மாற்றிப் பயன்படுத்தலாம். இந்த எளிய வழிமுறைகளைப் பின்பற்றி, உங்கள் தோட்டத்தில் மல்லிகை செடிகள் பூக்களின் கொத்துக்களுடன் செழிப்பாக வளர்வதைக் காணலாம்.