/indian-express-tamil/media/media_files/2025/08/04/jasmine-plant-care-growing-fertilizer-blooming-tips-2025-08-04-17-35-50.jpg)
Jasmine plant care growing fertilizer blooming tips
மல்லிகைப்பூ, அதன் மனதை மயக்கும் நறுமணத்திற்காகவே வீடுகளிலும், தோட்டங்களிலும் விரும்பி வளர்க்கப்படுகிறது. ஆனால், சில சமயங்களில் செடியில் பூக்கள் குறைவாகவே பூக்கின்றன. ஆனால் உங்கள் வீட்டில் உள்ள எலுமிச்சை தோலை வைத்தே இதற்கு அற்புத தீர்வு காண முடியும். செலவில்லாத இந்த இயற்கை வழியைப் பயன்படுத்தி, உங்கள் மல்லிகைச் செடியில் பூக்களைக் குவித்து, வீட்டை மணக்கச் செய்யுங்கள். இந்த முறை முற்றிலும் இயற்கை சார்ந்தது.
தயாரிக்கும் முறை:
முதலில், ஐந்து எலுமிச்சைப் பழத் தோல்களை எடுத்து, அவற்றை சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். நறுக்கிய துண்டுகளை ஒரு லிட்டர் கொள்ளளவுள்ள பாட்டிலில் போடவும். பாட்டிலில் தண்ணீர் நிரப்பி, இறுக்கமாக மூடி வைக்கவும். இந்த பாட்டிலை நிழலான இடத்தில் மூன்று நாட்கள் வைத்திருக்க வேண்டும். தினமும் மூன்று முறை பாட்டிலை நன்றாக குலுக்கிவிடவும். மூன்று நாட்களுக்குப் பிறகு, இந்த திரவத்தை வடிகட்டி, தோல்களை நீக்கிவிட வேண்டும்.
பயன்படுத்தும் முறை:
வடிகட்டிய கரைசலை 1:2 என்ற விகிதத்தில் தண்ணீருடன் கலக்க வேண்டும். அதாவது, ஒரு லிட்டர் கரைசல் என்றால், இரண்டு லிட்டர் தண்ணீர் சேர்க்க வேண்டும். இந்த நீர்த்த கரைசலை ஒரு ஸ்பிரே பாட்டிலில் ஊற்றவும். பின்னர், மல்லிகைச் செடியின் இலைகள் மீது இந்த கரைசலைத் தெளிக்கவும். இது ஒரு வளர்ச்சி ஊக்கியாகச் செயல்பட்டு, செடியில் அதிக மொட்டுகள் மற்றும் பூக்கள் பூக்க உதவும்.
எறும்புகளையும் விரட்டலாம்!
இந்த எலுமிச்சைத் தோல் கரைசலுக்கு இன்னொரு கூடுதல் பயனும் உண்டு. இது எறும்புகளை விரட்டவும் உதவுகிறது. வீட்டில் எறும்புகள் அதிகம் இருந்தால், இந்த கரைசலை நேரடியாக எறும்புப் புற்றுகளின் மீது ஊற்றி, அவற்றை முழுமையாக விரட்டலாம். இந்த இயற்கையான தீர்வைப் பயன்படுத்தி, செடிகளை ஆரோக்கியமாக வளர்ப்பதுடன், எறும்புகள் தொல்லையையும் குறைக்கலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.