/indian-express-tamil/media/media_files/2025/05/12/nFRwYUoGSePZXMpsLAEy.jpg)
பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்..!
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் 8-ந் தேதி கோலாகலமாக நடந்தது. 9-ந் தேதி தேரோட்டம், 10-ந் தேதி தீர்த்தவாரியுடன் மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா நிறைவு பெற்றது. இதேபோன்று அழகர்மலையில் இருந்து சுந்தரராஜப்பெருமாள், கள்ளழகர் வேடம் பூண்டு தங்கப்பல்லக்கில் நேற்று முன்தினம் மாலை 6.10 மணியளவில் மதுரைக்கு புறப்பட்டார். கண்டாங்கி பட்டு உடுத்தி, கையில் கைத்தடி, நேரிக்கம்பு ஏந்தி கள்ளழகர் பொய்கைக்கரைப்பட்டி, கள்ளந்திரி, அப்பன்திருப்பதி, கடச்சனேந்தல் வழியாக நேற்று காலை 6 மணி அளவில் மதுரை மூன்றுமாவடிக்கு வந்தார்.
அங்கு கள்ளழகரை பக்தர்கள் வரவேற்கும் எதிர்சேவை நிகழ்ச்சி நடந்தது. அழகர்வேடத்துடன் பக்தர்கள், தோல் பைகளில் இருந்த தண்ணீரை பீய்ச்சி அடித்து, வர்ணிப்பு பாட்டுப்பாடி அதிர்வேட்டுகள் முழங்க கள்ளழகரை எதிர்கொண்டு வரவேற்றனர். பின்னர் அங்கிருந்து புதூர், டி.ஆர்.ஓ.காலனி, ரிசர்வ்லைன், ரேஸ்கோர்ஸ், அவுட்போஸ்ட் பகுதிகளில் வழிநெடுகிலும் அமைக்கப்பட்டு இருந்த மண்டகப்படிகளில் கள்ளழகர் எழுந்தருளினார். நேற்று இரவு 10 மணி அளவில் தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி கோவிலுக்கு வந்தார்.
அங்கு பெருமாள் திருமஞ்சனமாகி தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளினார். இரவு 12 மணி அளவில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக் கொடுத்த மலா்மாலையை அணிந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 2.30 மணி அளவில் தல்லாகுளம் கருப்பணசாமி கோவிலுக்கு வந்து, தங்கக்குதிரையில் அமர்ந்து ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளினார். அதன்பின் 3 மணி அளவில் தங்கக்குதிரை வாகனத்தில் வைகை ஆற்றுக்கு புறப்பட்டு வந்தார்.
காலை 5.45 மணி முதல் 6.05 மணிக்குள் தங்கக்குதிரையில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார். வண்டியூர் வீரராகவப்பெருமாள் முன்கூட்டியே அங்கு வந்திருந்து கள்ளழகரை வரவேற்றார். இதனைத்தொடர்ந்து காலை 7.25 மணி வரை கள்ளழகர் வைகை ஆற்றில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தேனி மாவட்டங்கள் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுமார் 15 லட்சம் பக்தர்கள் அதிகாலை முதலே மதுரை மாநகரில் குவிந்திருந்தனர். அதனால் மதுரை மாநகரம் விழா கோலம் பூண்டிருந்தது. வைகை ஆற்றில் நேற்று இரவு முதலே பக்தர்கள் கூட தொடங்கினார்கள். கள்ளழகர் வேடம் அணிந்த பக்தர்கள் விடிய, விடிய கள்ளழகரை வர்ணனை செய்து ஆடிப்பாடி மகிழ்ந்தனர். தீப்பந்தம் ஏந்தியும், தோலினால் செய்த பைகளில் தண்ணீரை நிரப்பி பக்தர்கள் மீது பீய்ச்சி அடித்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
ஆழ்வார்புரம் பகுதியில் அமைக்கப்பட்ட மண்டகப்பதி, 2 டன் அதிகமான மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இன்றிரவு வண்டியூர் வீரராகவப் பெருமாள் கோயிலில் எழுந்தருளும் அழகரை பக்தர்கள் தரிசிக்கவுள்ளனர். நாளை (மே 13) காலை தேனூர் மண்டபத்தில் எழுந்தருளும் கள்ளழகர், மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் மற்றும் நாரைக்கு முக்தி அளிக்கிறார்.
மே 14-ம் தேதி காலை தல்லாகுளம் சேதுபதி மண்டகப்பதியில் எழுந்தருளும் கள்ளழகர், இரவு பூப்பல்லக்கில் எழுந்தருளி, மே 15 காலை அழகர்மலை நோக்கி பல்லக்கில் புறப்படுகிறார்.
பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய பாதுகாப்புக்காக மூன்று அடுக்கு தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. மேலும், 4000-க்கும் மேற்பட்ட போலீசார், 400 கண்காணிப்புக் கேமராக்கள், மற்றும் ட்ரோன் கண்காணிப்பு உள்ளிட்ட பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. 50-க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து போலீசார் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர். இது தவிர டிரோன் கேமரா மூலம் போலீசார் பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார்கள். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்துசெல்வதற்கு வசதியாக அரசு போக்குவரத்துகழகத்தின் சார்பில் மதுரைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.