கடைக்கோடியில் வசிக்கும் மக்களுக்கு கல்வியறிவு என்பது இன்றும் எட்டாக்கனியாகவே உள்ளது என்பதற்கு சான்றாக இருக்கிறார் பழங்குடியின பெண் காளியம்மாள்.
Advertisment
தமிழக - கேரள எல்லைப்பகுதியில் அமைந்துள்ளது மேட்டுப்பாளையம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கோபனாரி மலைக்கிராமம். சுற்றிலும் அடர்ந்த வனப்பகுதியான இங்கு சில இருளர் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். ஆடு மாடு மேய்த்தல், விவசாயம், வனப்பகுதிக்குள் தேன் எடுத்தல், கிழங்கு எடுத்தலை தங்கள் தொழிலாக செய்து வருகின்றனர்.
இங்குள்ள மருதன் - ஆண்டிச்சி தம்பதியின் ஒரே மகள் காளியம்மாள்(30). இவர் தனது கல்வியை 5வது வரை கோபனாரி ஊராட்சி ஒன்றிய பள்ளியிலும், 6 முதல் 10 ஆம் வகுப்பு வரை ஆனைகட்டி உயர்நிலைப்பள்ளியிலும் பயின்றுள்ளார்.
Advertisment
Advertisements
இந்த கிராமம், தமிழக - கேரள எல்லைப்பகுதியில் உள்ளதால் ஆற்றை கடந்து கேரள மாநிலம் மட்டத்துக்காடு சென்று அங்கிருந்து ஆனைகட்டி செல்ல வேண்டும். அப்படி சென்றுதான் காளியம்மாள் 10வது வரை படித்தார். தொடர்ந்து 11 முதல் 12 ஆம் வகுப்பு வரை, சீலியூர் பள்ளியில் பயின்றார்.
காளியம்மாள் வெற்றியை கொண்டாடும் கோபனாரி கிராம மக்கள்
பிறகு சமூக ஆர்வலர்களின் உதவியுடன், பல்வேறு கடின சூழ்நிலைகளை தாண்டி கோவை அரசு கலைக்கல்லூரியில் இளங்கலை பொருளாதாரம் படிப்பை முடித்தார்.
அதன் பின்னர் அதே சமூக ஆர்வலர்களின் உதவியுடன் சட்டம் பயில விண்ணப்பித்துள்ளார். கலந்தாய்விற்காக சென்றபோது மதுரை அரசு சட்டக்கல்லூரியில் காளியம்மாளுக்கு இடம் கிடைத்துள்ளது. இதனிடையே தந்தை மருதனுக்கு பக்கவாதத்தால் இரு கைகளும், கால்களும் செயலிழந்தன.
காளியம்மாள் வசிக்கும் கிராமம்
இதனால் குடும்ப சூழ்நிலை காரணமாக சட்டப்படிப்பை மதுரையில் தொடர முடியாமல் இருந்தவரை சமூக ஆர்வலர்கள் கோவை அரசு சட்டக்கல்லூரிக்கு மாற்றி, அவரது தந்தைக்கும் சிகிச்சையளிக்க ஏற்பாடு செய்தனர்.
இத்தனை கஷ்டமான சூழ்நிலையிலும், காளியம்மாள் தனது சட்டப்படிப்பை வெற்றிகரமாக முடித்து இப்போது பார் கவுன்சிலில் உறுப்பினராக பதிவு செய்துள்ளார். இருளர் இனத்தின் முதல் வழக்கறிஞர் என்பதால் அப்பகுதியில் வாழும் பழங்குடியின மக்களின் ஓர் அடையாளமாகவே மாறிவிட்டார் காளியம்மாள்.
இருளர் பழங்குடியினத்தில் முதல் வழக்கறிஞராக காளியம்மாள் இருப்பது தங்களது கிராமத்திற்கு பெருமை சேர்த்துள்ளதாக கோபனாரி கிராமத்தினர் மன மகிழ்ச்சியோடு தெரிவிக்கின்றனர்.
செய்தி: பி.ரஹ்மான் கோவை மாவட்டம்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“