கோடை விடுமுறை கூட்ட நெரிசலை சமாளிக்க பயணிகளின் வசதிக்காக தெலுங்கானா மாநிலம் சர்லபள்ளி - கன்னியாகுமரி இடையே சிறப்பு ரயில் இயக்க தென் மத்திய ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. சர்லபள்ளி, செகந்திராபாத்தில் இருந்து 15 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. சர்லபள்ளி - கன்னியாகுமரி வாராந்திர சிறப்பு ரயில் (07230) சர்லபள்ளியிலிருந்து ஏப்ரல் 2, 9, 16, 23, 30, மே 07, 14, 21, 28, ஜூன் 04, 11, 18, 25 ஆகிய புதன் கிழமைகளில் இரவு 09.50 மணிக்கு புறப்பட்டு வெள்ளிக்கிழமை அதிகாலை 02.30 மணிக்கு கன்னியாகுமரி வந்து சேரும்.
மறு மார்க்கத்தில் கன்னியாகுமரி - சர்லபள்ளி வாராந்திர சிறப்பு ரயில் (07229) கன்னியாகுமரியில் இருந்து ஏப்ரல் 04, 11, 18, 25, மே 02, 09, 16, 23, 30, ஜூன் 06, 13, 20, 27 ஆகிய வெள்ளிக்கிழமைகளில் அதிகாலை 05.15 மணிக்கு புறப்பட்டு சனிக்கிழமைகளில் காலை 11.40 மணிக்கு சர்லப்பள்ளி சென்று சேரும். இந்த ரயில்கள் நலகொண்டா, மிரியால்குடா, நடிக்குடே, சட்டெனபள்ளி, குண்டூர், தெனாலி, சிராலா, ஓங்கோல், நெல்லூர், ரேணிகுண்டா, திருத்தணி, காட்பாடி, திருவண்ணாமலை, விழுப்புரம், திருப்பாதிரிப்புலியூர், சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், கொடைக்கானல் ரோடு, மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூர், நாகர்கோவில் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
இந்த ரயில்களில் ஒரு குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டி, 5 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 10 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகள் ஆகியவை இணைக்கப்படும். இந்த ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு நாளை வெள்ளிக்கிழமை (மார்ச் 21) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.