'வீரபாண்டிய கட்டபொம்மன்’ என்றால் நமக்கெல்லாம் நினைவுக்கு வரும் முகம்... சிவாஜிகணேசன் தான். அதேபோல், ‘ஒளவையார்’ என்றால் உடனே நம் கண்முன் வந்து நிற்பவர்... கே.பி.சுந்தராம்பாள்!
Advertisment
தமிழ்த் திரையுலகில் இவருக்கு முன்பும், பின்பும் இவருக்கு இணையானவர்கள் எவருமில்லை என்பதே கே.பி. சுந்தராம்பாளின் வெற்றிச் சரித்திரம்.
ஈரோடு அருகே உள்ள கொடுமுடிதான் இவரது சொந்த ஊர். சுந்தராம்பாள் குரல், இளம் வயதிலேயே தனித்துவம் மிக்கதாக கணீரென, கேட்பவர்கள் மெய் சிலிர்த்து போகும் வகையில் இருந்தது.அந்த குரலால் தான் கரூரில் ‘நல்லதங்காள்’ நாடகத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. அப்போது பத்து வயதுதான் அவருக்கு..
நாடகங்களைப் பார்க்கவும் சுந்தராம்பாளின் கணீர்க் குரலில் பாடல்களைக் கேட்கவும் கூட்டம் அலைமோதின. நாடகங்களுக்கு ரிசர்வேஷனில் புக்கிங் நடந்தது. வெளிநாட்டில் கூட நாடகங்கள் போடப்பட்டன.
பிறகு, தமிழ் திரையுலகம் சுந்தராம்பாளை சிகப்புக் கம்பளமிட்டு வரவேற்றது.
நடிப்பிலும்உச்சம் தொட்டார் சுந்தராம்பாள்...
'ஒளவையாரைப் போல் எனக்குப் புகழும் பொருளும் தந்த படம் வேறெதுவுமில்லை' என்று பெருமையுடன் கூறுவார் சுந்தராம்பாள்..
ஜெமினி எஸ்.எஸ்.வாசன் அந்தக் காலத்திலேயே முப்பது லட்ச ரூபாய் செலவில், ‘ஒளவையார்’ படம் எடுத்தார். சுந்தராம்பாள் நடித்தால்தான் பொருத்தமாக இருக்கும் என்பதில் உறுதியாக இருந்தார். ஆனால், நாடகத்தில் பிஸியாக இருந்த அவருக்கு நேரமே இல்லை. அப்போது லட்ச ரூபாய்க்கான செக் உடனே கொடுத்து புக் செய்தார் வாசன். அதுவரை எந்த நடிகருக்கும், நடிகைக்கும் ஒரு படத்தில் நடிப்பதற்கு ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் கொடுத்ததில்லை.
கச்சேரியின் போது எடுத்த படம் (Image: Google)
‘ஒளவையார்’ படத்தில் ஒளவைக் கிழவியாகவே வாழ்ந்தார் சுந்தராம்பாள். படம் பார்த்துவிட்டு, ஒளவையார் இப்படித்தான் இருப்பார் என்று மக்கள் நம்பினார்கள். கூட்டம் கூட்டமாக வந்துபார்த்தார்கள். அதன்பிறகு அவர் போகும் இடங்களிலெல்லாம், ‘ஒளவையார்’ என்றே அவரை அழைத்தார்கள்.
தொடர்ந்து இயக்குநர் ஏ.பி.நாகராஜன் இயக்கத்தில் ‘திருவிளையாடல்’ படத்தில் நடிக்க அழைப்பு வந்தது. மீண்டும் ‘ஒளவையார்’ கதாபாத்திரத்தில் நடித்தார். அன்று முதல் தமிழகத்தில் ‘பழம் நீயப்பா’ என்ற பாடல் ஒலிக்காத ஆலயங்களே இல்லை. இன்றைக்கும் இவரின் ‘ஆறுவது சினம் கூறுவது தமிழ் அறியாத சிறுவனா நீ’ என்று ஒலிக்காத இடமே இல்லை.
இத்தனை சாதனைகள் புரிந்த சுந்தரம்பாளுக்கு, 1970-ல் மத்திய அரசு பத்மஸ்ரீ விருது கொடுத்து கவுரவித்தது.
எம்.ஜி.ஆரும், சிவாஜியும் கோலோச்சிக் கொண்டிருந்த அந்தக் காலகட்டத்தில், எம்.ஜி.ஆரே வாங்காத சம்பளமான ஒரு லட்சம் ரூபாயை சம்பளமாகப் பெற்றவர்... சுந்தராம்பாள் என்பது இவரின் குரலுக்குக் கிடைத்த இமாலய சாதனை. இவரின் சாதனைகளை இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்..
12 படங்களில் மட்டுமே நடித்த கே.பி.சுந்தராம்பாள், 1980-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 19-ம் தேதி காலமானார். அவர் மறைந்தாலும் சுந்தராம்பாளின் குரலுக்கும், பாடல்களுக்கும் என்றும் மறைவே இல்லை..
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil