New Update
/tamil-ie/media/media_files/uploads/2018/10/1-48.jpg)
சபரிமலை பெண்கள்
நீ கோயிலுக்குள் சென்றால் வீடு திரும்ப மாட்டாய்
சபரிமலை பெண்கள்
கேரளா.. கடவுளின் தேசம் என்று அழைக்கப்படும் இந்த மாநிலம் கடந்த 2 மாதங்களாக சந்திக்காத சோதனைகளே இல்லை எனலாம். இயற்கை எழில் கொஞ்சும் கேரளாவை இயற்கையே பழி வாங்கியது என்றால் அதை எவருமே மறுக்க மாட்டார்கள். மறக்கவும் மாட்டார்கள். வரலாறு காணாத மழை, வெள்ளம் மக்களை வாட்டி வதைத்தது.
வீட்டினுள் புகுந்த வெள்ளத்தால் மக்கள் சொந்த வீடுகளை விட்டு உயிரை காப்பாற்றிக் கொள்ள அலை மோதின. எந்த பக்கம் திரும்பினாலும் மழை, வெள்ளம். இதற்கு நடுவில் பசி, குளிர், நோய் தோற்று, முகாம்களை சுற்றி விஷ பாம்புகள். இந்த மாபெரும் சோதனையில் இருந்து கேரளாவை மீட்க அண்டை மாநிலங்கள் கைக்கோர்த்தன.
எல்லோரின் முயற்சியால் கேரளா மீண்டு எழுந்தது. மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியது. உதவிய கரங்களுக்கு நன்றி கூறி கேரள மக்கள் பல்வேறு வீடியோக்களை வெளியிட்டனர். சிலர் கடிதம் கூட எழுதி இருந்தனர். அப்பாடா.. ஒருவழியாக பிரச்சனை ஓய்ந்தது என்று நினைத்திருந்த நேரத்தில் தான் அடுத்த பரபரப்பு துவங்கியது.
கேரளாவில் உள்ள உலக பிரசித்திப் பெற்ற சபரி மலை கோயிலுக்குள் அனைத்து வயதுப் பெண்களும் செல்லலாம் என்று உச்சநீதிமன்ற்ம் வழங்கிய வரலாற்று தீர்ப்பு. பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த இந்த வழக்கில் இப்படியொரு தீர்ப்பு வரும் என்று பலரும் நினைத்திருக்க மாட்டார்கள். அதே சமயம் உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு கட்டாயம் இவ்வளவும் பெரிய எதிர்ப்பை சந்திக்கும் என்று பலரும் கணித்து இருப்பார்கள்.
தீர்ப்பு வெளியான நாள் முதல் சபரிமலைக்குள் பெண்கள் செல்லலாமா? கூடாதா? தீர்ப்பு சரியா? தவறா? நடை திறக்கும் அன்று என்ன நடக்கும்? என்று ஏகப்பட்ட விவாதங்கள் தொலைக்காட்சிகளில், செய்தித்தாளில் தொடர்ந்து வெளி வந்துக் கொண்டிருக்கின்றன.
ஒரு பக்கம் சில பெண்கள் இந்த தீர்ப்பை வரவேற்று கோயிலுக்குள் செல்ல தயாராகி வருகின்றன. மறுபக்கம் சபரிமலைக்குள் வரும் பெண்கள் மன்னிக்கபட மாட்டார்கள் என்று பெண்கள் பலரும் போராட்டங்களிலில் ஈடுப்பட்டு வருகின்றன்.
இந்த போராட்டம் கேரளாவில் நடந்தால் அதில் ஆச்சரியமில்லை. ஆனால் தமிழகம் தொடக்கி எந்த பகுதியில் இருந்தெல்லாம் பக்தர்கள் வருகிறார்களோ அங்கெல்லாம் போராட்டம் தலைதூக்க ஆரம்பித்தது. ஆனால் இவை எதையுமே பொருட்படுத்தாமல், தீர்ப்பை வரவேற்ற கேரள முதல்வர் பினராயி விஜயன், வழக்கில் மறுசீராய்வு மனுவிற்கு கூட அவசியமில்லை என்று கூறி மொத்த எதிர்புக்கும் முற்றுப்புள்ளி வைத்தார்.
இன்று மாலை நடை திறக்கப்பட இருப்பதால் சபரிமலையில் பல்லாயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.இந்த நாளுக்காக பல ஆண்டுகளாக காத்திருக்கும் ரேஷ்மா நிஷாந்த் கேரளாவில் அனைவராலும் உற்று நோக்கப்பட்டுள்ளார்.
எத்தனை கொலை மிரட்டல்கள், வன்மையான விமர்சனக்கள், கேவலமான பேச்சுகள் இவை எல்லாவற்றையும் கடந்து சபரிமலைக்கு சென்றே தீருவேன்.18 படிகளில் ஏறி என் விரதத்தை முடிப்பேன் என்று காத்துக் கொண்டிருக்கிறார்.இந்த முடிவுக்கு அவரின் கணவரும் ஆதரவளித்துள்ளார்.
ரேஷ்மாவை தெரியாத கேரள மக்களே இருக்க மாட்டார்கள். தீர்ப்பு வெளியான பின்பு ரேஷ்மா தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியிருந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.
”ஐயப்பன் கோயிலுக்குச் செல்ல விரதம் இருந்து வருகிறேன். ஆனால் என் வயது பெண்கள் சபரிமலைக்கு செல்லக்கூடாது என்பதால், விரதம் மட்டும் இருப்பேன், மலைக்குச் சென்றதில்லை. தற்போது உச்ச நீதிமன்றத்தின் தீா்ப்பின் அடிப்படையில், இந்த வருடம் வழக்கம் போல விரதம் இருந்து வருகிறேன். அதேசமயம் இந்தமுறை, சபரிமலைக்கு செல்ல இருக்கிறேன். எனக்கு ஆதரவாக எனது குடும்பத்தாரும், உறவினர்களும் இருக்கிறார்கள்.
இன்று நான் தனியாக இருக்கலாம், ஆனால் வரும் காலங்களில் நிறைய பெண்கள் சபரிமலைக்கு செல்வார்கள் என நம்புகிறேன். கடவுளை தரிசிப்பதில் ஆண்-பெண் பாகுபாடு இருக்ககூடாது” என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ரேஷ்மா இன்று திறக்கப்படவுள்ள சபரிமலைக்கு செல்ல இருமுடிக்கட்டி தயாராகி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ரேஷ்மாவிற்கு சில தினங்களுக்கு முன்பு ஃபேஸ்புக் பக்கத்தில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.”நீ கோயிலுக்குள் சென்றால் வீடு திரும்ப மாட்டாய்” என்று மிரட்ல் வந்ததாக ரேஷ்மா காவல் நிலையத்தில் புகாரும் அளித்திருந்தார்.
ரேஷ்மா மட்டுமில்லை, பெண்கள் கோயிலுக்குள் நுழைந்தால் கண்டிப்பாக கூட்டு தற்கொலை நடக்கும் என்று பல்வேறு அமைப்பினர் மிட்டல் விடுத்துள்ளனர், இவை எல்லாவற்றிற்கும் விடை இன்று மாலை தெரிந்து விடும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.