உலகிலேயே காதலை வெளிப்படுத்த சிறந்த இடம் மற்றும் தேன் நிலவு செல்ல சிறந்த இடமாக கேரள மாநிலம் மூணாறு பகுதியை லோன்லி பிளானட் (Lonely Planet) இதழ் தேர்ந்தெடுத்துள்ளது. இந்தியாவிலேயே அழகான பகுதியாகவும் மூணாறு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
புதுமண தம்பதிகள் பலர் தேனிலவுக்காக வெளிநாடுகளை நோக்கி படையெடுக்கையில், மூணாறு அதற்கான சிறந்த இடமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதற்கு காரணங்கள் பல இருக்கின்றன. தேயிலை தோட்டங்கள், முறுக்கு பாதைகள், மலைகள், பசுமை போர்த்திய புல்வெளிகள், நீர்வீழ்ச்சிகள் ஆகியவை அதற்கான காரணங்களில் சில.
இந்தியா பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்தபோது, ஆட்சியாளர்கள் கோடை காலத்தில் ஓய்வெடுக்கும் இடமாக மூணாறு இருந்தது குறிப்பிடத்தக்கது. மூணாறுக்கு வருகை தரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை கடந்தாண்டு 5.27 சதவீதமாக இருந்தநிலையில், நிகழாண்டில் 6.23 சதவீதமாக அதிகரித்துள்ளது. மேலும், சுற்றுலா பயணிகளை ஈர்க்க பல்வேறு திட்டங்களை செயல்படுத்த அம்மாநில சுற்றுலா துறை முடிவெடுத்துள்ளது.
எரவிகுளம் தேசிய பூங்கா, மேட்டுப்பட்டி அணை, தேவிகுளம் ஏரி, ஆணைமுடி, ஹைடல் பூங்கா, பொத்தமேடு, ஃபன் ஃபாரஸ்ட், மூணாறு தேயிலை மியூசியம், அட்டுக்காடு நீர்வீழ்ச்சி, வொண்டர்வேலி அட்வெண்ச்சர் பூங்கா உள்ளிட்ட இடங்களை நீங்கள் மூணாறில் நிச்சயம் சென்று பார்க்க வேண்டும்.
இதையும் படியுங்கள்: ஆசியாவிலேயே கேரளா நாம் நிச்சயம் பார்க்க வேண்டிய இடம் ஏன்?