ஏறத்தாழ 30 ஆண்டுகள் பழமை வாய்ந்த தோசைக் கல்லையும் தற்போது உபயோகப்படுத்தும் நிலைக்கு நம்மால் கொண்டு வர முடியும். அதற்கான வழிமுறைகளை இதில் காணலாம்.
முதலில் தோசைக் கல்லை எடுத்து அடுப்பில் வைத்து நன்றாக சூடுபடுத்த வேண்டும். அடுப்பில் தோசைக் கல் சூடாகி வரும் போது, ஒரு கைப்பிடி அளவு கல் உப்பை எடுத்து அதில் தூவி விட வேண்டும். சிறிது நேரம் கழித்து இதில் எலுமிச்சை பழச்சாறு பிழிந்து விட வேண்டும்.
இவ்வாறு எலுமிச்சை சாறை பிழிந்த பின்னர், அதே எலுமிச்சை தோல் வைத்து தோசைக் கல்லை தேய்த்து சுத்தப்படுத்த வேண்டும். இப்படி செய்யும் போதே தோசைக் கல்லில் இருந்து துரு மற்றும் அழுக்குகள் சிறிது சிறிதாக நீங்க தொடங்கும்.
இதைத் தொடர்ந்து, தோசைக் கல் மீது பாமாயில் ஊற்ற வேண்டும். மேலும், ஒரு பேப்பர் வைத்து தோசைக் கல் முழுவதும் பாமாயிலை தேய்த்து விட வேண்டும். இப்படி செய்வதால் தோசைக் கல்லில் இருந்து துருக்கறைகளை அகற்ற முடியும். இதனை செய்யும் போது அடுப்பை ஆஃப் செய்யக் கூடாது.
இப்போது மீண்டும் ஒரு எலுமிச்சை பழத்தை பிழிந்து விட்டு, அதன் தோலை வைத்து தோசைக் கல்லை சுத்தப்படுத்த வேண்டும். இதன் பின்னர், அடுப்பை ஆஃப் செய்து விட்டு தோசைக் கல் மீது இருக்கும் உப்பை துடைத்து அகற்றி விடலாம்.
இதையடுத்து, தோசைக் கல்லை வாழைத்தண்டு வைத்து துடைக்க வேண்டும். இவ்வாறு துடைத்த பின்னர், பாத்திரம் தேய்க்க பயன்படும் சோப் கொண்டு தோசைக் கல்லை கழுவ வேண்டும். இதற்கடுத்து, ஒரு டீஸ்பூன் வினிகர் மற்றும் சிறிதளவு டூத் பேஸ்டைக் கலந்து, அதனை தோசைக் கல் மீது தேய்க்க வேண்டும்.
இவ்வாறு தேய்த்த பின்னர், 5 நிமிடங்கள் கழித்து தோசைக் கல்லை மீண்டும் தண்ணீர் ஊற்றி கழுவி விட வேண்டும். இறுதியாக சுத்தம் செய்த தோசைக் கல்லில் எண்ணெய் தடவி சுமார் 3 மணி நேரங்கள் வெயிலில் காய வைக்க வேண்டும். இதன் வாயிலாக தோசைக் கல் புதியது போன்று மாறிவிடும்.