/indian-express-tamil/media/media_files/2025/09/02/koomapatti-thangapandi-2025-09-02-12-58-39.jpg)
Koomapatti Thangapandi
விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே உள்ள மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்திருக்கிறது கூமாபட்டி என்ற அழகான கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த தங்கப்பாண்டி, தனது ஊரின் இயற்கை அழகை, அங்குள்ள பிளவக்கல் அணையின் பிரம்மாண்டத்தை, "ஏங்க… ஊட்டி, கொடைக்கானல் எல்லாம் எதுக்கு, நம்ம கூமாபட்டிக்கு வாங்க" என இன்ஸ்டாகிராமில் கலக்கியவர். தற்போது 'சிங்கிள் பசங்க' என்ற ரியாலிட்டி ஷோ மூலம் ரசிகர்களின் மனதைக் கொள்ளை கொண்டுள்ளார்.
சமூக வலைதளங்களில் நாம் பார்த்த கலகலப்பான, கபடமற்ற தங்கப்பாண்டிக்கும், ஷோவில் நாம் பார்க்கும் மரியாதையான தங்கப்பாண்டிக்கும் உள்ள வித்தியாசம் குறித்து அவரும், அவரது ஜோடியான நடிகை சாந்தினி பிரகாஷும் சினி உலகம் யூடியூப் நேர்காணலில் மனம் திறந்து பேசியுள்ளனர்.
”முதல்ல எல்லாம் என்னைப் பார்த்தா மேடையில பேசக்கூடத் தயங்குவேன். சாந்தினி வந்தப்புறம் தான் எல்லாம் மாறிப் போச்சு. முதல்ல அவங்களப் பார்த்ததும் கொஞ்சம் பயமா இருந்துச்சு. ஆனா அவங்கதான் எனக்கு நடிப்புன்னா என்னன்னு சொல்லிக் கொடுத்தாங்க. கட்டிப்பிடிக்கிற மாதிரியான காட்சிகளை எப்படிப் பண்றதுன்னு கூட அவங்க சொல்லிக் கொடுத்தாங்க.
நாங்க ரெண்டு பேரும் ஜோடியா இருக்கிறதப் பார்த்து, பலபேரு நிஜமாவே காதலிக்கிறோமானு கேக்குறாங்க. ஆனா நிஜத்துல நாங்க நல்ல நண்பர்கள்தான். ஷோவுக்காகத்தான் அப்படியெல்லாம் பண்றோம். சும்மா காமெடியா சாந்தினிய கோமபட்டிக்கு கூட்டிட்டுப் போய் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னதுலதான் பலருக்கும் அந்தச் சந்தேகம் வந்திருக்கு. எனக்கு லவ் ஃபெயிலியர் ஆனதுனாலதான் நான் சிங்கிள் பசங்க ஷோவுக்கே வந்தேன்.
ஆனா, ஒண்ணு சொல்லணும். என்னால என் கிராமத்துக்கு நல்ல பேரு கிடைச்சிருக்கு. அரசாங்கத்துல இருந்து கூமாபட்டிக்கு 10 கோடி ரூபாய் ஒதுக்கி இருக்காங்களாம். ஒருகாலத்துல என்னையப் பார்த்து சிரிச்சவங்க எல்லாம், இப்போ என்னைய மதிக்கிறாங்க. இதுக்குக் காரணம் நீங்க கொடுத்த ஆதரவுதான்” என்று தங்கப்பாண்டி கலகலப்புடன் அந்த வீடியோவில் பேசினார்.
தங்கப்பாண்டி இன்று ஒரு 'இன்ஸ்டா செலிபிரிட்டி' மட்டுமல்ல, தனது கிராமத்தின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்த ஒரு மக்கள் பிரதிநிதியாகவும் பார்க்கப்படுகிறார். தனது எதார்த்தமான அணுகுமுறை, கடின உழைப்பு மற்றும் தனது வேர்களை மறக்காத குணம் ஆகியவை, கூமாபட்டி தங்கப்பாண்டியை சாதாரண இளைஞனிலிருந்து ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக உயர்த்தியுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.