விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்க போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் போட்டியாளராக அறிமுகமான KPY பாலா இன்று சினிமா, ரியாலிட்டி ஷோ, ஆங்கரிங் என பிஸியாக இருக்கிறார்.
அத்துடன் டிவி, ரியாலிட்டி ஷோக்களில் தனக்கு கிடைக்கும் வருமானம் மூலம் பல ஏழை எளியக் குழந்தைகள் கல்வி கற்கவும், பசியாற்றவும் பிற அத்தியாவசிய உதவிகளையும் செய்து வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு இலவச ஆம்புலன்ஸ் சேவை ஒன்றைத் தொடங்கி வைத்திருந்தார்.
சமீபத்தில் சென்னை வெள்ளத்தில் சிக்கி பாதிக்கப்பட்ட 200 குடும்பங்களுக்கு தலா 1000 ரூபாய் கொடுத்து உதவி செய்தார் பாலா.
இந்நிலையில், தற்போது திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் பெய்த இடைவிடாத மழை காரணமாக, தாமிரபரணி உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
இதில் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. ஆறுகளின் கரையோரம் இருக்கும் அனைத்து ஊர்களையும் வெள்ளம் சூழ்ந்து, இந்த 2 மாவட்ட மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தென்மாவட்டத்துக்கு கூடிய விரைவில் உதவுவதாக பாலா கூறியிருக்கிறார்.
தென்காசியில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாலா செய்தியாளர்களிடம் கூறுகையில், ’சின்ன வயசுல இருந்தே எனக்கு ஏதாவது பண்ணனும் ஆசை. அப்போ என்கிட்ட காசு இல்ல. இப்போ நிகழ்ச்சி எல்லாம் பண்ணும் போது காசு வருது. என்னால முடிஞ்சத பண்ணலாம் ஆரம்பிச்சது தான் இதெல்லாம்.
தென்மாவட்டத்துக்கு உதவணும் எனக்கு ரொம்ப ஆசை இருக்கு. என்கிட்ட மொத்தம் 5 லட்சம் ரூபாய் இருந்தது அதெல்லாம் சென்னை வெள்ளத்துக்கு கொடுத்துட்டேன். கூடிய சீக்கிரம் மறுபடியும் காசு வந்த உடனே தென்மாவட்டத்துக்கு நிச்சயமா பண்ணுவேன்.
எல்லாருமே ஏதோ ஒரு தேவையில இருக்காங்க. சும்மா வெறுங்கையோட போக முடியாது. நம்ம கையில இருந்து ஏதாவது எடுத்துட்டு போகணும்.
நம்ம எத சார்ந்தும் கிடையாது, மக்களோட அன்புதான் என்ன ஓட வைக்குது. மக்களோட பாசத்துக்கு நன்றி’, என்று நெகிழ்ச்சியுடன் கூறினார் பாலா.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“