கோவையில், குழந்தைகள் திருவள்ளுவர் வேடமணிந்து பங்கேற்ற நிகழ்வு, லிங்கன் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றது.
கோவை, நீலாம்பூர் பகுதியில் தமிழ் மொழி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக அங்குரம் பாடசாலா இயங்கி வருகிறது. உலக பொதுமறையான திருக்குறள், தமிழ் நன்னெறி நூல்கள் மற்றும் பழமொழிகளை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமான நிகழ்ச்சி இங்கு அரங்கேறியது.
இதில் 83 குழந்தைகள் பங்கேற்று, 5 நிமிடங்களில் 35-க்கும் மேற்பட்ட திருக்குறள் மற்றும் பழமொழிகளை எடுத்துரைத்தனர். மேலும், 40 குழந்தைகள் இதில் திருவள்ளுவர் போன்று வேடமணிந்திருந்தனர். இந்நிகழ்வு, லிங்கன் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது.
லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவன தலைவர் ஜோசப் இளந்தென்றல், இதற்கான சான்றிதழை வழங்கினார். நிகழ்ச்சியில், அங்குரம் பாடசாலா நிறுவனர் மருத்துவர் முருகேஷ், பள்ளி முதல்வர் திலகவதி முருகேசன், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
செய்தி - பி. ரஹ்மான்