நாடாளுமன்ற தேர்தல் 2024-ஐ முன்னிட்டு 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தும் வகையில் திருச்சிராப்பள்ளி காவிரி ஆற்றுப் படுகையில் கல்லூரி மாணவ, மாணவிகள் உருவாக்கியுள்ள மணற் சிற்பத்தையும், தேர்தல் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகளையும் தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சித் தலைவருமான மா.பிரதீப்குமார் இன்று பார்வையிட்டு, மாணவ, மாணவிகளுடன் தேர்தல் விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்து கொண்டார்.
![](https://img-cdn.thepublive.com/filters:format(webp)/indian-express-tamil/media/post_attachments/5a6c7c3d-4d6.jpg)
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி தமிழ்நாட்டில் பாராளுமன்றப் பொதுத்தேர்தல்-2024 வருகின்ற 19.04.2024 அன்று நடைபெறவுள்ளதை முன்னிட்டு, இத்தேர்தலில் 18 வயது பூர்த்தியடைந்த ஒவ்வொரு வாக்காளர்களும் தங்களது ஜனநாயகக் கடமையினை ஆற்றிட வேண்டும் என்பதனை வலியுறுத்தும் விதமாக, தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சித்தலைவருமான மா.பிரதீப்குமார் அறிவுறுத்தலின்படி வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாரத்தான் ஓட்டம், 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தும் வகையில் விழிப்புணர்வு பேரணி, ரங்கோலி கோலம் வரைதல், வாகனங்கள் மற்றும் குடிநீர் கேன்களில் விழிப்புணர்வு ஒட்டுவில்லைகளை ஒட்டுதல், 85 வயதிற்கு மேல் உள்ள வாக்காளர்களின் இல்லங்களுக்கு சென்று அழைப்பிதழ்கள் வழங்குதல், அனைத்து வாக்காளர்களுக்கும் வாக்காளர் தகவல் சீட்டு மற்றும் வாக்காளர் கையேடு வழங்குதல், இராட்சத பலூன்களை பறக்க விட்டு விழிப்புணர்வு ஏற்படுத்துதல், தோட்டக்கலைத் துறையின் சார்பில் தானியங்கள், நறுமண பயிர்களான வெந்தயம், கசகசா மற்றும் கருஞ்சீரகத்தைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ள விழிப்புணர்வு இலட்சினையை பொதுமக்களின் பார்வைக்காக அமைத்தல் மற்றும் காய்கள், கீரை வகைகள் மற்றும் பழங்கள் கொண்டு அமைக்கப்பட்டுள்ள தேர்தல் விழிப்புணர்வு இலட்சினை மற்றும் பழங்களில் விழிப்புணர்வு வாசகங்கள் செதுக்கப்பட்டு காட்சிப்படுத்தப்படுவது, பள்ளி மாணவிகளைக் கொண்டு ஹீலியம் பலூன்களை வானில் பறக்க விட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்வு உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
அதனடிப்படையில் இன்று திருச்சிராப்பள்ளி மாவட்ட நிர்வாகம், எம்.ஏ.எம். மேலாண்மை கல்லூரி மற்றும் யங் இந்தியா கிளப் திருச்சி பிரிவு இணைந்து திருச்சிராப்பள்ளி மாம்பழச்சாலை அருகில் காவிரி ஆற்றுப்படுகையில் “மணல் சிற்பம் மூலம் வாக்காளர்களுக்கு வாக்களிப்பதன் அவசியத்தை எடுத்துரைக்கும் வகையில் வாக்குப் பதிவு இயந்திரம், விரலில் மை வைத்த சிற்பம் ஆகியவற்றை மணற் சிற்பமாக வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
![](https://img-cdn.thepublive.com/filters:format(webp)/indian-express-tamil/media/post_attachments/ef45c01a-041.jpg)
மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பொறுப்புணர்வு மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சித் தலைவருமான மா.பிரதீப்குமார் கலந்து கொண்டு ஒருவரின் வாக்களிக்கும் உரிமையைப் பயன்படுத்துவதன் முக்கியத்துவத்தையும், ஜனநாயக செயல்முறைக்கு ஒவ்வொரு நபரின் பங்களிப்பின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்.
மேலும் மாணவர்களையும், குறிப்பாக இளம் தலைமுறை வாக்காளர்களை வாக்களிக்குமாறும் அதோடு மட்டுமல்லாமல், நண்பர்கள், உறவினர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் ஜனநாயக கடமையை நிறைவேற்றிட வலியுறுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
வாக்குப்பதிவு இயந்திரம், வாக்களித்தபின் மையால் குறிக்கப்பட்ட விரல், மற்றும் SVEEP முறையான வாக்காளர் கல்வி மற்றும் தேர்தல் பங்கேற்பு பிரச்சாரத்தை குறிக்கும் சின்னங்களை மாணவர்களால் மணலில் சிறப்பாக செய்யப்பட்டிருந்தது.
இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக மாணவர்கள் தேர்தலில் வாக்களிப்பது குறித்தான உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர். நடன நிகழ்ச்சிகள், மைம் (MIME) செயல்களின் மூலம் வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்திடும் வகையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில், துணை ஆட்சியர் வேலுமணி, ஸ்ரீரங்கம் வருவாய் கோட்டாட்சியர் தட்சிணாமூர்த்தி, எம்.ஏ.எம் கல்லூரி பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் மற்றும் ஒய்.ஐ நிறுவனத்தின் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“