மதுரை மாநகரில் நேர்மையின் முன்மாதிரியாக செயல்பட்ட ஆட்டோ ஓட்டுநருக்கு மாநகர காவல் ஆணையர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
தவிட்டுசந்தையைச் சேர்ந்த சரவணகுமார் தனது குடும்பத்தினருடன் 02.03.2025 அன்று ஆட்டோவில் பயணித்தார். தெப்பகுளம் பகுதியில் இறங்கியபோது, 15 பவுன் தங்க நகைகள் மற்றும் ஒரு செல்போன் அடங்கிய தனது கைப்பையை ஆட்டோவில் மறந்து விட்டுச் சென்றார்.
தன்னுடைய கைப்பை இழந்ததை உணர்ந்ததும், அவர் உடனடியாக தெப்பகுளம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்நிலையில், ஆட்டோ ஓட்டுநர். நாகேந்திரன் (கோச்சடை) தனது ஆட்டோவில் பயணிகளை இறக்கிவிட்டு வந்தபோது, ஒரு கைப்பை இருப்பதை கவனித்தார். உடனே, அதனை உரிமையாளரிடம் ஒப்படைக்க வேண்டுமென தீர்மானித்த அவர், பயணியை ஏற்றிய மஹால் பகுதிக்கு வந்தார்.
அந்த நேரத்தில், காவல்துறையிலிருந்து அவருக்கு அழைப்பு வந்தது. உடனடியாக தெப்பகுளம் காவல்நிலையம் சென்ற அவர், 15 பவுன் தங்க நகைகள் மற்றும் செல்போன் இருந்த கைப்பையை நேர்மையுடன் உரிமையாளரிடம் ஒப்படைத்தார்.
இச்செயலை பாராட்டிய மாநகர காவல் ஆணையர் முனைவர் ஜெ. லோகநாதன் , ஆட்டோ ஓட்டுநர் நாகேந்திரனை பொன்னாடை அணிவித்து, வெகுமதி வழங்கி பாராட்டினார்.
மக்கள் மத்தியில் நல்லெண்ணம் பெற்ற நாகேந்திரனின் செயல், நேர்மைக்கு ஒரு சிறந்த உதாரணமாக மதுரை மாநகரில் பெருமையாக பேசப்படுகிறது.