108 வைணவ திவ்ய தேசங்களில் 47-வது தலமாக விளங்கும் மதுரை கூடல் அழகர் பெருமாள் கோயிலில், வைகாசி பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று (ஜூன் 10) அதிகாலை வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
பெரியார் பேருந்து நிலையத்திற்கு அருகே அமைந்துள்ள இந்தக் கோயிலில், உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் அதிக அளவில் திரண்டிருந்தனர். விழாவையொட்டி, தெற்குமாசி வீதி சந்திப்பில் நிறுத்தப்பட்டிருந்த அலங்கரிக்கப்பட்ட தேரில், அதிகாலை 6 மணிக்கு வியூக சுந்தரராஜ பெருமாள், ஸ்ரீதேவி மற்றும் பூதேவியுடன் எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சியளித்தார். பின்னர், காலை 6.30 மணியளவில் தேரோட்டம் தொடங்கியது. பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சிறப்பு தரிசனம் செய்தனர். தேரோட்டம், பாண்டிய வேளாளர் தெரு, தெற்கு வீதி, திருப்பரங்குன்றம் சாலை, நேதாஜி ரோடு, மேலமாசி வீதி வழியாகச் சென்று, காலை 9 மணியளவில் மீண்டும் தேர்நிலையை அடைந்தது.
விழாவின் நெரிசலைக் கருத்தில் கொண்டு, நேதாஜி ரோடு, பெரியார் பேருந்து நிலையம், கிரைம் பிராஞ்ச் மற்றும் திருப்பரங்குன்றம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது. சுமார் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். மேலும், தேரோட்ட பாதையிலுள்ள பக்தர்களுக்கு நீர் மோர், அன்னதானம் உள்ளிட்ட வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.