உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் சித்திரை திருவிழா கடந்த 29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவையொட்டி மீனாட்சி அம்மன் மற்றும் சுந்தரேஸ்வரர் பிரியாவிடையுடன் தினமும் காலை, மாலை இரு வேளைகளிலும் பல்வேறு வாகனங்களில் மாசி வீதிகளில் எழுந்தருளி உலா வந்தனர்.
சித்திரைத் திருவிழாவின் 8-ம் நாள் விழாவான மீனாட்சி அம்மனின் பட்டாபிஷேக விழா, திரளான பக்தர்கள் சாட்சியாக செவ்வாய்க்கிழமையில் கோலாகலமாக நடைபெற்றது. மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில், இரவு 7.35-க்கு மேல் அம்மனுக்கு கிரீடம் சூட்டும் விழா ஆன்மிக உள்புகழுடன் இடம்பெற்றது. இதில், கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் ரூக்மணி பழனிவேல்ராஜன், அம்மனிடமிருந்து செங்கோலை பெற்று சுவாமி சந்நிதியின் 2-ம் பிரகாரத்தில் சுற்றிவந்து மீண்டும் அம்மனுக்கே ஒப்படைத்தார். இதனைத் தொடர்ந்து, மதுரையின் அரசியாக மீனாட்சி அம்மன் வெள்ளி சிம்மாசனத்தில் எழுந்தருளி, நான்குமாசி வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
வீதியுலாவுடன் இணைந்து கோலாட்டம், சிலம்பாட்டம், கரகாட்டம், கொம்பு, மேளம் போன்ற பாரம்பரியக் கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. ஆயிரக்கணக்கான சிறுவர், சிறுமிகள் தெய்வீக வேடங்களில் கலந்துகொண்டு நிகழ்ச்சியை மேலும் மெருகேற்றினர். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மாசி வீதிகளில் அம்மனை தரிசித்து ஆனந்தத்தில் மகிழ்ந்தனர். நாளை திக் விஜயமும் நாளை மறுநாள் திருக்கல்யாணமும் நடைபெற உள்ளது.