மதுரையில், மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாண வைபவத்தை முன்னிட்டு சுமார் ஒரு லட்சம் பேருக்கு பிரம்மாண்ட விருந்து வைக்கும் பணிகள் நடைபெறுகிறது.
மதுரை சித்திரை திருவிழாவில் 10-ஆம் நாள் நிகழ்வாக மீனாட்சி அம்மன் - சுந்தரேசுவரர் கோயிலில் மீனாட்சிக்கும், சுந்தரேசுவரருக்கும் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது. இந்த நிகழ்வை காண வரும் பக்தர்களுக்கு 27-வது ஆண்டாக திருவருள் முருகன் பக்த சபை சார்பில் விருந்து வழங்கப்பட இருக்கிறது.
இதனை முன்னிட்டு விருந்து தயாரிக்கும் பணிகள் அனைத்தும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கற்கண்டு சாதம், சர்க்கரை பொங்கல், வெண்பொங்கல், வடை, வெஜிடபிள் பிரியாணி, சாம்பார் சாதம், தக்காளி சாதம், தயிர் சாதம் போன்றவை விருந்தில் பரிமாறப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
இதற்காக, 7,000 கிலோ அரிசி, 12,000 கிலோ காய்கறிகள் மற்றும் 5,000 கிலோ மளிகை பொருட்களைக் கொண்டு திருக்கல்யாண விருந்து தயாரிக்கப்பட்டு வருகிறது. இதற்காக, சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் தாங்களாகவே முன்வந்து காய்கறிகளை வெட்டிக் கொடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், சுமார் 400-க்கும் மேற்பட்ட சமையல் கலைஞர்கள் விருந்து தயாரிக்கின்றனர்.