உள்ளூர் தயாரிப்புகளை பிரபலப்படுத்தும் வகையில் ரயில் நிலையங்களில் "ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு" விற்பனை நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. மதுரை கோட்டத்தில் 35 ரயில் நிலையங்களில் 44 விற்பனை நிலையங்களில் உள்ளூர் தயாரிப்புகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த விற்பனை நிலையங்களில் உள்ளூர் பயணிகள் மற்றும் ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் ரயிலில் இருந்து இறங்கி வந்து பொருட்களை வாங்க வேண்டிய நிலை இருந்து வந்தது. ரயிலில் பயணம் செய்யும் வெளியூர் பயணிகள் அந்தந்த ஊர் தயாரிப்புகளை எளிதில் வாங்கும் வகையில் நடைமேடைகளில் தள்ளுவண்டிகளில் விற்பனை செய்யும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த புதிய முயற்சியான தள்ளுவண்டிகள் மூலம் விற்பனை செய்யும் முறையை அறிமுகப்படுத்தும் இரண்டாவது கோட்டம் மதுரை கோட்டமாகும். மதுரையின் பிரபல பொருளான மல்லிகை மாலையாக, சரமாக மதுரை ரயில் நிலைய நடை மேடைகளில் தள்ளுவண்டிகள் மூலம் விற்பனை துவக்கப்பட்டுள்ளது.
அதேபோல திண்டுக்கல் நகரில் பிரபலமான பூட்டுக்களும் தள்ளு வண்டியில் விற்பனை செய்யும் திட்டம் துவங்கப்பட்டுள்ளது. இந்த புதிய திட்டத்தின் மூலம் உள்ளூர் சிறு வியாபாரிகள் பயன்பெறுவதோடு அவர்களது வாழ்க்கை தரமும் உயர வழி வகுக்கிறது.
செய்தி: சக்தி சரவணன் - மதுரை.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“