/indian-express-tamil/media/media_files/2025/10/15/suicide-attempt-2025-10-15-08-59-53.jpg)
துப்பாக்கிச் சுடுதல் போட்டிகளில் பல பதக்கங்கள் வென்ற 10-ஆம் வகுப்பு மாணவன், தன்வசம் இருந்த ஏர் கன் மூலம் சுட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாட்டுத்தாவணி அருகே உள்ள சம்பக்குளம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் கிருத்திகா. இவரின் மகன் யுவன் (வயது 15) துப்பாக்கிச் சுடுதலில் திறமை வாய்ந்த வீரராகத் திகழ்ந்தார். மாநில மற்றும் தேசிய அளவிலான பல போட்டிகளில் பங்கேற்று யுவன் பல்வேறு விருதுகளை வென்றுள்ளார்.
இந்நிலையில், இன்று காலை யுவன் திடீரென தனது ஏர் கன்னை எடுத்து, தன்னைத் தானே சுட்டுக்கொண்டதாகக் கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட கடுமையான காயத்தின் காரணமாக அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவம் குறித்து தகவல் அறிந்த மாட்டுத்தாவணி போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். உயிரிழந்த யுவனின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த துயரச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். துப்பாக்கிச் சுடுதல் வீரரான மாணவன் யுவன் தற்கொலை செய்துகொண்டதற்கான உடனடி காரணம் எதுவும் இதுவரையில் வெளியாகவில்லை. திறமை வாய்ந்த மாணவனின் இந்த திடீர் மரணம் அப்பகுதி மக்களிடையே மிகுந்த அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.