சமீபத்தில் ஒரு இளம் பெண் எங்களிடம் வந்தார். தான் வீட்டில் சமைத்த உணவையே உட்கொள்வதாகவும், எங்கு சென்றாலும் கையில் தண்ணீர் பாட்டில் கொண்டு சென்றும் கூட, அவரது வயிறு உப்புசமாக இருப்பதாகவும், குமட்டலாகவும் இருப்பதாகக் கூறினார்.
முந்தையை நாள் வேலை முடிந்து செல்லும் வழியில் கடையில் இருந்து வாங்கிய மாங்காயில் இருந்து, காலையில் மாங்காய் சாலட் செய்து மதிய உணவுக்காக எடுத்துச் சென்றதாகவும் அவர் சொன்னார். அதில் என்ன இருந்தது?
நாங்கள் ஒரு மாதிரியை எடுத்து, ஆய்வக சோதனை செய்தோம். அதில் உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் ஆணையத்தால் (FSSAI) தடை செய்யப்பட்ட கால்சியம் கார்பைடு கொண்டு செயற்கையாக பழுக்க வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. உண்மையில், மாம்பழ சீசனில் தேவை அதிகமாக இருக்கும்போது, பல விவசாயிகள் சட்டவிரோதமாக செயற்கை முறையில் பழங்களை பழுக்க வைக்கின்றனர். இத்தகைய ரசாயனங்கள் உங்கள் உடல்நலத்திற்கு குறுகிய மற்றும் நீண்ட கால பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.
மாம்பழங்கள் எவ்வாறு செயற்கையாக பழுக்க வைக்கப்படுகின்றன?
கால்சியம் கார்பைடு போன்ற ரசாயனங்களைப் பயன்படுத்துவதன் மூலமோ அல்லது எத்திலீன் வாயுவை பழத்தில் செலுத்தும் எத்திலீன் சிகிச்சை மூலமோ இது செய்யப்படலாம். கால்சியம் கார்பைடு ஈரப்பதத்துடன் வினைபுரியும் போது அசிட்டிலீன் வாயுவை (acetylene gas) உற்பத்தி செய்கிறது. இது பழம் பழுக்கும் செயல்முறையை துரிதப்படுத்துகிறது. இந்த வாயுவில் தீங்கு விளைவிக்கும் ஆர்சனிக் மற்றும் பாஸ்பரஸ் இருக்கலாம்.
மாம்பழங்கள் எத்திலீன் வாயுவுக்கு உட்படுத்தப்படும் போது, இது பழத்தில் மாற்றங்களை ஏற்படுத்துகிறது, மென்மையாக்குகிறது, நிறம் மற்றும் சுவையை மாற்றுகிறது.
/tamil-ie/media/media_files/uploads/2022/10/mango1.jpg)
செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட மாம்பழத்தின் ஊட்டச்சத்து மதிப்பு என்ன?
இதன் ஊட்டச்சத்து மதிப்பில் குறிப்பிடத்தக்க சரிவு உள்ளது. நார்ச்சத்து குறைகிறது, அதே போல் வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் அளவும் குறைகிறது.
அஸ்கார்பிக் அமிலம் (வைட்டமின் சி), சிட்ரிக் அமிலம் மற்றும் மாலிக் அமிலத்தின் அளவு கடுமையாக குறைகிறது. இயற்கையாக பழுத்த மாம்பழங்களில் இரும்பு, துத்தநாகம் மற்றும் தாமிரம் போன்ற அத்தியாவசிய தாதுக்கள் அதிக அளவில் இருக்கும்போது, செயற்கையாக பழுத்த மாம்பழங்களில் அவற்றின் அளவு குறைந்து காணப்படும். ஃபோலேட் மற்றும் trace elements மோசமான தரத்தில் இருக்கும்.
செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் உங்களை எவ்வாறு பாதிக்கின்றன?
நீண்ட காலத்திற்கு எடுத்துக் கொள்ளும்போது, அவை நரம்பு மண்டலத்தை பாதித்து, தலைச்சுற்றல், தலைவலி மற்றும் மனநிலை மாற்றங்களுக்கு ஆளாக்குகின்றன. கால்சியம் கார்பைடு உற்பத்தி செய்யும் அசிட்டிலீன் வாயு உங்கள் மேல் சுவாசக் குழாயை பாதித்து, தொண்டை எரிச்சல், இருமல் மற்றும் சுவாசிப்பதில் சிரமத்தை ஏற்படுத்தும்.
செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களை நீண்ட காலம் சாப்பிடும் போது, அதன் கால்சியம் கார்பைடில் இருந்து வரும் ஆர்சனிக் மற்றும் பாஸ்பரஸ், நீரிழப்பு மற்றும் காலப்போக்கில் புற்றுநோய், முகப்பரு மற்றும் தோல் புண்கள் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும். வாய் புண்கள் வரக்கூடும்.
ஒட்டுமொத்தமாக குடல் பலவீனமடைந்து வாந்தி, வயிற்று வலி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்படலாம். சில நேரங்களில், உங்கள் ரத்த அழுத்தமும் குறையலாம்.
மாம்பழங்களை பாதுகாப்பாக உட்கொள்வது எப்படி?
ஆய்வக சோதனை செய்யாமல் செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களை அடையாளம் காண உறுதியான வழி எதுவும் இல்லை. இயற்கையாக பழுத்த மாம்பழங்களைப் போலல்லாமல், அவை தண்ணீரில் மிதக்கும் என்றும், காம்பை ஒட்டிய பகுதியில் வெள்ளை நிற திட்டுகள் இருக்கும் என்றும், லேசான சுவை மற்றும் குறைந்த shelf life கொண்டிருக்கும் என்றும் சிலர் கூறினாலும், இந்த அடையாளங்கள் எதுவும் போதுமான உத்தரவாதம் அளிக்காது.
எனவே, மாம்பழங்களை சிறிது நேரம், அதாவது 10 நிமிடங்கள் தண்ணீரில் ஊற வைக்கவும். பின்னர் ஓடும் நீரில் நன்றாக கழுவி, தோலை நீக்கவும். வெஜிடபிள் வாஷ் பயன்படுத்த வேண்டாம். அவற்றில் ரசாயனங்களும் உள்ளன.
Read in English: Is your mango artificially ripened? Here’s what it does to your gut and brain