நினைவில் உள்ளவற்றை மறந்துவிடுவது எப்போதும் நடப்பதுதான். குறிப்பிட்ட ஒரு பொருள் முக்கியமானது அல்ல என்று மனதிற்குப் பட்டால், நமது மூளை அதிலிருந்து தள்ளி நின்றுகொள்கிறது. நம்முடைய நினைவுத்திறனில் இழப்பு ஏற்படுவது, பொதுவாக முதுமையின் அறிகுறியாக இருக்கும். ஆனால், ஒருவரின் மறதி சாதாரணமானதுதான் என்பதை நீங்கள் எப்படி உறுதிப்படுத்திக்கொள்வீர்கள்? ஒருவேளை, அது அல்சைமர் எனப்படும் மறதிநோயின் அறிகுறியாகவும் இருக்கக்கூடும். சில அறிகுறிகளை உற்றுகவனிப்பதன் மூலம் இதை அறிந்துகொள்ள முடியும்.
பொருள்களை இடம்மாற்றிவைப்பது
சிலர் பொருள்களை இடம்மாற்றிவைத்துவிட்டு பிறகு அவற்றை எங்கே வைத்தோம் என்று தேடுவார்கள். அடிக்கடி இப்படி செய்பவர்கள் என்றால், அவர்களுக்கு விரைவில் பரிசோதனை செய்யவேண்டும். குறிப்பாக, அந்தப் பொருள் சம்பந்தமே இல்லாமல் வீட்டின் ஏதோ ஒரு மூலையில் வைக்கப்பட்டிருந்தது என்றால், அதை முக்கியமாக கணக்கில்கொள்ள வேண்டும்.
பழகிய முகங்களையே நினைவில்கொள்ள முடியாமை
வயதாகிவிட்டால் நன்றாகப் பழக்கமானவர்களைக்கூட அடையாளம் கண்டுகொள்ள சற்று நேரம் பிடிப்பது இயல்புதான். அல்சைமர் மறதிநோயால் பாதிக்கப்பட்டவருக்கோ, குறிப்பிட்ட நபரைப் பற்றிய விவரங்கள் படிப்படியாக மறந்துபோய்க்கொண்டே இருக்கும். உங்கள் அன்புக்குரிய யாருக்கேனும் இப்படியொரு நிலைமை ஏற்படுமானால், அவரை மருத்துவரிடம் அழைத்துச்சென்று காண்பியுங்கள்.
தொலைந்துபோவது
அடுத்து, தான் வசித்த அல்லது நன்றாகப் பயணம்செய்து பழக்கப்பட்ட பகுதிகளிலேயே, ஒருவர் தொலைந்துபோவது..! அதாவது, அவருக்கு ரொம்பவும் பழக்கப்பட்ட தெருவாக இருக்கும்; ஆனால், திடீரென புதியதாகத் தோன்றும். அடிக்கடி புழங்கும் கட்டடத்துக்குள் வழிதெரியாமல் போவது போன்றவை எச்சரிக்கைமணியைப் போன்ற அறிகுறிகள் ஆகும். இந்த நிலையில் உள்ளவர்களுக்கு உடனடி சிகிச்சை அவசியம்!
சொல் இயலாமை
’கிளினிக்கல் இண்டெர்வென்சன் இன் ஏஜிங் (Clinical Interventions in Aging)’ எனும் மருத்துவ இதழில் அண்மையில் வெளியிடப்பட்ட ஓர் ஆய்வில், பேச்சுக்கு இடையே ஒரு சொல்லை மறந்துவிடுவது அல்லது சொன்ன வாக்கியங்களையோ கதைகளையோ திரும்பத்திரும்பச் சொல்வது ஆகியவை மறதிநோயின் ஆரம்பக் கூறுகள் என்று கூறப்பட்டுள்ளது. சில சமயங்களில் குறிப்பிட்ட வார்த்தைக்குப் பதிலாக தவறாக வேறு ஒரு வார்த்தையைக் குறிப்பிடுவதை பலரிடமும் பார்க்கலாம். மறதிநோயால் பாதிக்கப்பட்டவர்களும் அடிக்கடி, சொல்லவேண்டிய வார்த்தைகளை மறந்துவிட்டு, அதற்குப் பதிலாக, கற்பனையான வார்த்தைகளைப் பயன்படுத்துவார்கள் என்பதை கவனிக்கவேண்டுமென எச்சரிக்கிறார்கள், மருத்துவ வல்லுநர்கள்.
அன்றாடத் தவறுதல்
யாராக இருந்தாலும் அன்றாடச் செயல்பாடுகளில் தவறுவது எப்போதும் உள்ள குணம்தான். முதுமைக்கால நினைவு இழப்பு உங்களை மட்டுப்படுத்துவதாக அமைந்துவிடும் என்றாலும் அன்றாடச் செயல்பாடுகளை பாதிக்காது. மறதிநோயோ ஒருவரின் நுண்ணறிவுத்திறனைக் குன்றச் செய்துவிடும். வேலைக்குப் போவது, கட்டணம் செலுத்துவது போன்ற சாதாரணச் செயல்பாடுகளிலும் இது எதிரொலிக்கும்.
தமிழில்: இரா.தமிழ்க்கனல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.