ஒரு புதிய பியூட்டி’ டிரெண்ட் ஆகும்போது,அதை முயற்சிக்க நாமும் விரும்புகிறோம், இல்லையா? அப்படிதான் சமீபமாக மாதவிடாய் இரத்தத்தை ஃபேஸ் மாஸ்காக பயன்படுத்துவது வைரலாகி வருகிறது. ஆம், நீங்கள் படித்தது சரிதான்! இது எவ்வளவு மோசமாகத் தோன்றினாலும், சில டிக்டாக் யூசர்ஸ், அதன் நன்மைகளுக்காக தங்கள் முகத்தில் மாதவிடாய் இரத்தத்தை தடவுகிறார்கள்.
ஒரு யூஸர், மாதவிடாய் இரத்தத்தில் "அனைத்து ஸ்டெம் செல்கள் மற்றும் குழந்தைக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் உள்ளன, இது நிச்சயமாக, உங்கள் சருமம் மற்றும் உடலுக்குத் தேவை என்றார். மற்றவர்கள் இது தெளிவான மற்றும் ஒளிரும் சருமத்தை அடைய உதவியது என்று கூறினர்.
இது உண்மைதானா? அப்படியானால், இதுகுறித்து தோல் மருத்துவர் கூறுவது என்ன?
மாதவிடாய் இரத்தத்தை முகத்தில் பயன்படுத்துவது இப்போது டிரெண்ட் ஆகி வருகிறது. மாதவிடாய் இரத்தம் அவர்களின் சருமத்திற்கு ஊட்டமளிக்கிறது, முகப்பருவை நீக்குகிறது மற்றும் சருமத்திற்கு பல வழிகளில் பயனளிக்கிறது என்று மக்கள் நம்புகிறார்கள். ஆனால் இது உண்மையல்ல, மேலும் இதற்கு எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை, என்று தோல் மருத்துவரான கீதிகா மிட்டல் குப்தா இன்ஸ்டாகிராமில் தெரிவித்தார்.
அதற்கு பதிலாக,மாதவிடாய் இரத்தம், இறந்த சரும செல்கள் மற்றும் எண்டோமைசியம் (endomysium) எனப்படும் இறந்த உள் புறணி ஆகியவற்றால் மாசுபட்டிருப்பதால் தொற்றுநோயை ஏற்படுத்தும் என்று அவர் விளக்கினார்.
பெங்களூரைச் சேர்ந்த லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சை நிபுணரும், ஐவிஎஃப் நிபுணருமான மருத்துவர் வித்யா வி பட் இதை ஒப்புக்கொண்டார்.
மாதவிடாய் இரத்தம், இரத்த எண்டோமெட்ரியல் திசு, கர்ப்பப்பை வாய் மற்றும் பிறப்புறுப்பு சுரப்புகளைக் கொண்டுள்ளது. பல பெண்களுக்கு யோனி மற்றும் கர்ப்பப்பை வாய் தொற்று மற்றும் எண்டோமெட்ரிடிஸ் (endometritis) எனப்படும் எண்டோமெட்ரியல் நோய்த்தொற்றுகள் இருக்கலாம்.
மாதவிடாய் திரவத்தில் இருக்கும் பாக்டீரியா மற்றும் பூஞ்சை, சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும் மற்றும் பருக்களை மிகைப்படுத்தலாம். எனவே உங்கள் முகத்தில் மாதவிடாய் இரத்தத்தைப் பயன்படுத்துவது, உண்மையில் நல்லதல்ல என்று மருத்துவர் பட் கூறினார்.
மும்பையில் உள்ள பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணரான மருத்துவர் பராக் தெலாங்கும், இது பயனளிக்காது மற்றும் "தோலை சேதப்படுத்தும்" என்று வலியுறுத்தினார்.
இந்த நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் உங்கள் தோல் பிரச்சனைகள் மோசமடையலாம்.
ஆரோக்கியமான அல்லது மீளுருவாக்கம் செய்யாத கருப்பை செல்கள் துண்டாக்கப்படுவதால் மாதவிடாய் இரத்தம் உருவாகிறது. எனவே, சந்தேகத்திற்கிடமான பலன்களைக் கொண்ட இத்தகைய சிகிச்சைகளில் இருந்து விலகி இருப்பது நல்லது என்று மருத்துவர் தெலாங் கூறினார்.
சிலர் பீரியட் ப்ளட் ஃபேஷியலையும் PRP உடன் குழப்புகிறார்கள்.
பிளேட்லெட் ரிச் பிளாஸ்மா (Platelet-rich plasma) என்பது வளர்ச்சி காரணிகளால் செறிவூட்டப்பட்ட ஒரு மருத்துவ சிகிச்சையாகும், இது சருமத்துக்கு புத்துயிர் அளிப்பதுடன் காயங்களை குணப்படுத்துகிறது.
எனவே ஆன்லைனில் நீங்கள் பார்க்கும் விஷயத்தில் கவனமாக இருங்கள். புதிதாக எதையும் முயற்சிக்கும் முன் உங்கள் தோல் மருத்துவரை அணுகவும் என்று மருத்துவர் கீதிகா மிட்டல் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“