மெர்ரி கிறிஸ்மஸ் 2020: இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் குறிக்கும் வகையில் உலகெங்கிலும் கிறிஸ்துமஸ் பண்டிகை டிசம்பர் 25 அன்று கொண்டாடப்படுகிறது.
வரலாறு :
கிறித்தவத்துக்கு முந்திய காலப்பகுதியில், ஆரம்பகால ஐரோப்பியர்கள் ஒளி, பிறப்பு ஆகிய இரண்டையும் குளிர்காலக் கொண்டாட்டமாக கொண்டாடினர். இக்கொண்டாட்டத்தின் மதம் சாராப் பகுதிகளாக குடும்ப உறுப்பினர்கள் ஒன்று கூடல், நல்லெண்ணங்களை வளர்த்தல் என்பன பின்பற்றப்பட்டன. மாரிச்சூரியகணநிலைநேரம் ( Winter Solistice) போது கூடுதலான பகல் நேரம், நீண்ட நேரம் சூரிய ஒளி ஆகியவை மக்களுக்கு மகிழ்ச்சியை தந்தன. எனவே, குளிர்காலக் கொண்டாட்டங்களின் சில பகுதிகளையும் கிறிஸ்துமஸ் திருவிழா தன்னகத்தே கொண்டுள்ளது.
தொடக்கத்தில், இயேசு கிறிஸ்து கி.பி. சுமார் 33ம் ஆண்டில் சிலுவையில் அறையப்பட்டு அடக்கம் செய்யப்பட்டு மூன்றாம் நாள் சாவில் இருந்து உயிர்த்ததைக் குறிக்கும் உயிர்ப்பு ஞாயிறு -ஐத் தான் கிறிஸ்தவம் கொண்டாடியது. ஆரம்பகால கிறிஸ்துவ சமூகங்களில் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் விரும்பப்படவில்லை என்பதால் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்னுரிமை கொடுக்கப்படவில்லை. இருப்பினும், நான்காம் நூற்றாண்டில், திருச்சபைகள் இயேசுவின் பிறப்பை விடுமுறையாக நிறுவ முடிவு செய்தனர். குளிர்காலக் கொண்டாட்டங்களின் தாக்கங்களும் இதற்கு முக்கிய காரணமாக இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இயேசு யூதேயாவிலுள்ள பெத்லகேமில் மரியாவுக்கும் ஜோசப்புக்கும் பிறந்தார். எவ்வாறாயினும், நவீன கிரிகோரியன் நாட்காட்டி அப்போது இல்லை என்பதால் டிசம்பர் 25ல் இயேசு பிறந்தார் என்பத்கற்கு எந்த பதிவும் இல்லை. மேலும், இயேசு பிறந்ததற்கான சரியான தேதியை புனித நூளான பைபிளிலும் குறிப்பிடவில்லை. முதல் கிறிஸ்தவ ரோமப் பேரரசர் என்று அழைக்கப்படும் முதலாம் கான்ஸ்டன்டைன் - டிசம்பர் 25 ஐ ‘கிறிஸ்துமஸ்’ என்றும், இயேசுவைகக் கொண்டாடும் நாள் என்றும் அறிவித்தார். சில ஆண்டுகளுக்குப் பிறகு, முதலாம் போப் ஜூலியஸ், இந்த திருநாள் விழா( டிச. 25)இயேசு பிறப்பைக் குறிக்கும் என்று அறிவித்தார்.
கொண்டாட்டங்கள் டிசம்பர் 24 (கிறிஸ்துமஸ் ஈவ்) தொடங்கி டிசம்பர் 26 வரை (பாக்சிங் டே) தொடர்கின்றன.
முக்கியத்துவம் :
மனித குலம் ஞானவொளி பெற இயேசு கிறிஸ்துவால் போதிக்கப்பட்ட கருணை, மன்னிப்பு ஆகிய மாண்புகள் மீது நமது நம்பிக்கையை கிறிஸ்துமஸ் விழா மீண்டும் உறுதிப்படுத்துகிறது. ஏசுவின் பிறந்த நாள் விருந்தான கிறிஸ்துமஸ் பெரும் மகிழ்ச்சி, கொண்டாட்டங்களின் காலம். கிறிஸ்துமஸ் சமயங்களில் கிறிஸ்துவர்கள் கடவுளுக்கு நன்றி செலுத்துவதுடன் ஒருவரை ஒருவர் மிகுந்த மகிழ்ச்சி, அமைதி, பரஸ்பர பரிசு வழங்குதல் ஆகியவற்றுடன் வாழ்த்திக் கொள்ளுகின்றனர்.
இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் திருநாள் விழா, நோய்த் தொற்று பரவல் காரணமாக பல கட்டுப்பாடுகளுடன் கொண்டாடப்படுகின்றன.